பனிப் பொழிவினால் சிக்கிம் மாநிலத்தில் சிக்கித் தவித்த 2500 சுற்றுலாப் பயணிகளை இந்திய இராணுவத்தினர் மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
வடமாநிலங்களில் தற்போது கடுமையான பனிப்பொழிவால் பீகார், உத்தரபிரதேசம், குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உறைய வைக்கும் அளவுக்கு குளிர் காற்று வீசுகிறது. ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக வீதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனி படர்ந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இந்தியா-சீன எல்லைக்கு மிகவும் அருகாமையில் உள்ள நதுலா என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் குறித்த பகுதியை விட்டு வெளியேற முடியாத அளவிற்கு பனிப்பொழிவு நீடித்தது.
குறித்த தகவல் அறிந்த இராணுவ வீரர்கள், அங்கு சென்று பனிப்பொழிவில் சிக்கித் தவித்த சுமார் 2500 சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.