சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தற்போதைய நிலையில் இணைந்தே செல்ல வேண்டும்.
மிக நீண்ட காலமாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் அரசியல் பிரதிநிதிகள், அதாவது தமிழ் மக்களின் தாயக பூமியென பெயரிடப்பட்டுள்ள தமிழீழத்தின் தமிழ் பிரதிநிதிகள் வேறுபட்ட கட்சிகள் மூலமாக இலங்கைத் தீவின் பாராளுமன்றம் சென்று, அங்கு இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாராளுமன்ற இருக்கைகளை காலம் காலமாக சூடாக்கி வருகின்றனர்.
முதலாவதாக பாராளுமன்றம் என்றால் என்ன? இதை ஆங்கிலத்தில் பார்ளிமென்ற் (Parliament) என கூறுவார்கள்.
இதனது வரவிலக்கணம், அர்த்தங்களை ஆராயுமிடத்தில், இதனது மூலப்பொருள், பிரெஞ்சு மொழியில் பார்ல் (Parler) என்ற சொல்லிருந்தே உதயமாகியுள்ளது. அதாவது கதை, பேசு, உரையாடு என்ற அர்த்தங்களை மூலப்பொருளாக கொண்டு உருவாகியதே பாராளுமன்றம்.
பாராளுமன்ற என்பது, கதைப்பதற்கும் உரையாடுவதற்கும் ஆனால், இடம் என்பது இங்கு மிக தெளிவாகுமிடத்தில், இதை கடந்த ஆறு தசாப்பதங்களுக்கு மேலாக எமது தமிழ் அரசியல் பிரமுகர்கள் நிச்சயமாக சரியான முறையில் செய்கிறார்கள் என்பதை நாம் யதார்த்த ரீதியாக காண்கிறோம்.
இதற்கு காலம் காலமாக பாராளுமன்றம் சென்ற சகல தமிழ் பிரதிநிதிகள், விசேடமாக ஐந்திலிருந்து பத்து சதவீதமான புலம்பெயர் தமிழ் மக்கள் மீது, கடந்த ஐந்து வருடங்களாக சவாரி செய்துவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் விதிவிலக்கில்லை.
அப்படியானால் தமிழ் பிரதிநிதிகள் இலங்கைத் தீவின் (சிறிலங்காவின்) பாராளுமன்றத்திற்கு எதற்காக செல்கின்றார்கள்? செல்ல விரும்பி, தேர்தல்களில் பெரும் தொகையான பணத்தை செலவு செய்து, தம்மை பாராளுமன்ற உறுப்பினார்களாக தெரிவு செய்யுமாறு அப்பாவி வாக்களர்களிடம் மண்டியிடுகிறார்கள் என்ற வினாவிற்கு இங்கு பதில் தெரிந்தே ஆக வேண்டும்.
அதே இடத்தில் சகல தேர்தல்களை பகிஸ்கரிக்குமாறு விதண்டாவாதம் செய்பவர்கள், பாராளுமன்றத் தேர்தலை மட்டும் பகிஸ்கரிக்காது, வெளிநாடுகளிலிருந்து தமக்கு கிடைத்த பாரிய நிதியை வீண் விரயம் செய்து, எதற்காக பாராளுமன்ற செல்வதற்கு ஆசைப்படுகிறார்கள் என்பதை நாம் ஆராய கடமைபட்டுள்ளோம்.
இலங்கைத்தீவின் (சிறிலங்காவின்)பாராளுமன்றத்தின் மொத்த பிரதிநிதிகள் தொகை 225. இதில் வடக்கு கிழக்கிலிருந்து ஆகக் கூடியது இருபாத்து ஐந்து உறுப்பினர்களே தமிழ் தேசியத்தை வலியுத்தக் கூடியவர்களாக பாராளுமன்றம் செல்ல முடியும்.
அப்படியானால் தமிழ் தேசியம் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் அப்பாவி வாக்களர்களுக்கு கிடைத்த, கிடைக்கவிருக்கும் பலன் என்ன? அதிலும் விசேடமாக தமக்கு இரு பாராளுமன்ற உறுப்பினர்களே தெரிவாகலாமென வீர வசனம் பேசியவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
சரி இரு இடங்கள் மட்டும் அல்ல, உணர்ச்சிவச அரசியல் பேசும் புலம்பெயர் வாழ் மக்களின் தண்டல் நிதியில், இவர்கள் 25 ஆசனங்களை கைப்பற்றிவிட்டர்களென ஓர் கதைக்கு எடுத்து கொண்டாலும், ஆறாவது திருத்த சட்டம் அமுலில் உள்ள பாராளுமன்றத்தில் இவர்களால் என்ன செய்ய முடியும்?
இலங்கைத் தீவின் (சிறிலங்காவின்) பாராளுமன்றத்திற்கு செல்லும், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பிரதிநிதிகள் யாவரும், அப்பாவி வாக்களர்களுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் இவர்கள் தமிழிழ பிரதிநிதிகளாக தனித்து நின்று தமது தொகுதிகளுக்கோ, பிராந்தியங்களுக்கோ, மாகாணங்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாது என்ற யதார்த்தத்தை யாரும் மறுக்க முடியாது.
அப்படியானால், அரசியல் உரிமை தவிர்ந்த மற்றைய விடயங்களில் தன்னும் இவர்களால், இவர்களுக்கு வாக்களிக்கும் மக்களுக்கு ஏதும் செய்ய முடியுமா என்பதற்கு, தமிழ் தேசியம் பேசும் சகல தமிழ் பிரதிநிதிகளும், முஸ்லிம் பிரதிநிதிகளிடமிருந்து பல விடயங்களை கற்று கொள்ள வேண்டியுள்ளது.
அதாவது த.தே.கூ.அங்கத்தவர்களுக்கு அரசியல் அனுபவங்கள் இருப்பினும், தமது பிராந்தியத்தில் மக்களின் அபிவிருந்தியை எப்படியாக செய்யலாம் என்ற பயிற்சி நிசசயம் தேவைப்படுகிறது என்பதை இவர்கள் மறைக்க முடியாது.
மக்கள் சேவை
முன்பு ஒரு ஆயுதப் போராட்டம் வெற்றி நடையுடன் தமிழர் தாயக பிரதேசத்தை தமிழர் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது. அவ்வேளையில் அமைச்சர் பதவிகளை வகித்த தமிழர்களின் செயற்திட்டம் என்பது தமிழ் மக்களின் இன்னல்களுக்கு தீர்வு காண்பதற்கானது அல்ல.
ஆனால் கடந்த ஆறு வருடங்களாக அரசியல் நிலைமைகள் யதார்த்தங்கள் வேறு என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் வேளையிலேயே சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகளிகளால் தனித்து எதையும் நிறைவேற்ற முடியாது என்பதை த. தே. கூ.இன் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழர் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று தேர்தல் காலங்களில் வீரம் வாசனங்கள் பேசியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உண்மையில் கடந்த தேர்தலில் தெரிவாகியுள்ள த. தே. கூ.இன் பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஓரளவு தன்னும் நிறைவேற்றும் எண்ணமிருந்தால்,
இவர்கள் நிச்சயம் சிறிலங்க அரசுடனும், தெற்கின் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தற்போதைய நிலையில் இணைந்தே செல்ல வேண்டும்.
த. தே. கூ.இன் பாராளுமன்ற உறுப்பினர்கள் இயலுமானால் அமைச்சு பதவிகளையும் ஏற்க வேண்டும்.
தற்போதைய நிலையில், சிங்கள அரசுடனும், சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களுடனும், ஒத்துபோய் விடயங்களை சாதிக்க முடியாதவர்கள், அரசியலிருந்து ஒதுங்கி, தமது தகுதிக்கு ஏற்ற முறையில் ஏதும் செய்து காலத்தை கழிப்பதே புத்தியான செயல்.
இல்லை மீண்டும் 2020ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரும், அதிலும் கலந்து கொண்டு வெற்றி பெறுவோம் என யாரும் பகற் கனவு கண்டாலும், அவர்களும் இறுதியில் சிங்கள அரசுடனும், சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து வேலை செய்யாவிடில், மீண்டும் வழமை போல் பாராளுமன்ற கதிரைகளை சூடாக்கும் வேலையே தொடரும்.
எதற்காக பாராளுமன்ற செல்ல விரும்புகிறார்கள்?
அம்மா சத்தியமாய் நான் எந்த கட்சியினுடைய ஆதரவாளனோ, அங்கத்தவனோ அல்ல. உண்மையை கூறுகின்றேன் – பாராளுமன்றம் செல்ல ஆசை கொண்டவர்கள் யாவரும், உண்மையில் பொதுநலத்திற்கு மேலாக சுயநலம் கொண்டவர்களே!
மக்களுக்கு சேவை செய்ய விரும்புவர்கள் யாவரும் நிச்சயம் பாரளுமன்றம் செல்ல வேண்டுமா?
அன்னை திரேசா
உதரணத்திற்கு இந்தியாவிலிருந்து தனது சமூக மனிதபிமான பணிகளை உலகம் பெருமைப்படும் அளவிற்கு திறம்பட செய்த அன்னை திரேசா ஓர் பாராளுமன்ற உறுப்பினரா?
இன்றும் என்றும் உலகம் பாராட்டும் முக்கிய பிரமுகர்களான – நவீன இந்தியாவின் தந்தை மகாத்மா கந்தி, கத்தோலிக்க பாதிரியார் புனித வின்சன் டி போல், அமெரிக்காவின் மாட்டின் லூதர் கிங் போன்றோர் எந்த பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள்?
இவர்கள் மக்களுக்கு உலகம் வியக்கும் வகையில் தமது சேவைகளை செய்யவில்லையா? இப்படியாக ஆயிரம் உதாரணங்களை என்னால் இங்கு தர முடியும்.
ஆகையால் தகைமை கொண்டவர்கள் யாராக இருந்தாலும், முதலில் தமது தகைமைகளின் அடிப்படையில் மக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும்.
உதரணத்திற்கு, உணர்ச்சிவச அரசியல் பேசும் புலம் பெயர் வாழ் மக்களுக்கு அரசியல் செய்யும் சட்டத்தரணிகள், இந்த ஆறு வருடத்தில் தடுப்பு காவலில் உள்ள எத்தனை கைதிகளின் விடுதலைக்காக உழைத்தார்கள்?.
கடந்த தேர்தலுக்காக புலம்பெயர் வாழ் மக்களிடம் கை நீட்டி பணம் வாங்கிய சட்டத்தரணிகள், காலம் தாழ்த்தாது தடுப்பு கவலில் உள்ள அனைவரது விடுதலைக்கு உழைப்பதற்கு முன் வரவேண்டும்.
இது மட்டுமல்லாது, தமிழர் தாயக பூமியில் பறிபோயுள்ள பல ஆயிரம் ஏக்கர் கணிகளிற்கான வழக்குகளை தொடருவதுடன், ஆங்கங்கே நடைபெறும் கைது, சித்திரவதை, பாலியல் வன்முறை போன்றவற்றிற்கும் வழக்கு தொடர சட்டத்தரணிகள் முன்வர வேண்டும்.
இவற்றை தினமும் அலட்சியம் செய்வதுடன், தினமும் த.தே.கூ, ஐக்கிய நாடுகள் சபை, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சுருக்கமாக கூறுவதனால், ஒட்டு மொத்தமாக சகலரிலும் குறை காண்பது என்பது, உண்மையில் பித்தலாட்ட அரசியலே.
சமூக சேவை, மக்கள் சேவைக்கு பாராளுமன்ற கதிரைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பது சிரிப்பிற்குரிய விடயம். மனம் உண்டனால் இடமுண்டு என்பார்கள்.
ஒவ்வொருவரும் தமக்குரிய தகைமைக்கு ஏற்ப முழுமனதுடன் வேலை செய்தால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலான அந்தஸ்தை இயற்கையாகவே பெற்றுக் கொள்வார்கள்.
சிறிலங்காவின் பாராளுமன்ற செல்லும் சகலர்களுக்கும், இளைப்பாறிய ஊதியம் உட்பட, நல்ல மாதந்த ஊதியம் கொடுக்கப்படுகிறது, அவர்களுக்கு உத்தியோகபூர்வமான வண்டிகளும் அதற்கான எரிபொருள் செலவுடன், அரச பாதுகாப்பு கொடுக்கப்படுவதுடன், இவர்கள் தமது செயலாளர் லீகிதர்களென சிலரை அரச ஊதியத்துடன் வேலைக்கு அமர்த்தவும் முடியும்.
இத்துடன் இவர்களுக்கு இராஜதந்திர அந்தஸ்திற்கான சிவப்பு கடவு சீட்டு, பாராளுமன்ற அமர்விற்கான சன்மானம் வழங்கப்படுகிறது.
இவற்றுடன் மிக ருசியான மூன்று நேர உணவு, பாராளுமன்ற உணவகத்தில் மிக குறைந்த விலைக்கு இவர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்பதை இவர்கள் தமக்கு வாக்களிக்கு அப்பாவி மக்களுக்கு கூறுவதில்லை.
மிக நீண்ட காலமாக வெற்றி பெற்று வரும் த.தே.கூ.பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டுமென, மக்களால் நிராகரிக்கப்பட்டு ஐந்தாம் இடத்தில் உள்ளவர்கள் கூறுவது மிகவும் வேடிக்கையானது.
இவர்கள் படுதோல்வியின் பின்னரும், அரசியல் முதிர்ச்சி அடையவில்லை என்பதை தெளிவாக்கிறது.
மற்றவர்களில் பிழை பிடிப்பதிலும், மற்றவர்கள் என்ன செய்ய வேண்டுமென கூறுபவர்கள், தங்களால் மக்களிற்கு என்ன செய்ய முடியுமென்பதை இன்று வரை கூறுவதற்கு முன் வரவில்லை.
இவர்கள் இப்படியாக காலத்தை கழிப்பார்களானால், 2020 தேர்தலில் மட்டுமல்ல, 2030 இலும் நிச்சயம் வெற்றி பெறமாட்டார்கள். விதண்டாவாதம் கதைப்பதிலேயே காலத்தை கழிப்பவர்கள் எப்படியாக மக்களுக்கு சேவை செய்ய முடியும்?
கடந்த தேர்தலில் நடைபெற்ற பலவிதமான கரிபூசும் சம்பவங்களின் பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பினர், மிக இலகுவாக யாரையும் த.தே.கூ.இல் இணைக்க சம்மதிப்பார்களா என்பது கேள்வி குறி!
அப்படியாக த.தே.கூ. செய்ய முன்வருமனால், நிச்சயம், வந்த வெள்ளம் நின்ற வெள்ளத்தை கொண்டு சென்ற கதையாக தான் முடியும்.
உணர்ச்சிவச அரசியல்
தமக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு (த.தே.கூ.) சகுனம் பிழைத்தால் போதும் என்ற அடிப்படையிலேயே கடந்த தேர்தல் பரப்புரைகளை, மேற்கொண்ட நபர்கள், மக்களால் ஓரம் கட்டப்பட்டு, ஓட்டுக் குழுவென சித்தரிக்கபடும் ஈ.பி.டிக்கு பின்னால் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டது அதிர்ச்சி தரும் விடயம் அல்ல. இவ்விடயங்கள் யாவற்றையும் புலம் பெயர் தேசங்களிலிருந்து உணர்சிவச அரசியல் பேசுபவர்கள் கவனத்தில் கொள்வார்களா?
தமிழீழ மக்களின் தற்போதைய நிலையில், ஜனநாயக நீரோடையில் ஒட்டுக் குழுக்களுக்கு இடம் கொடுக்காது, பாராளுமன்ற கதிரைகளை கைப்பற்றுவதுடன் நின்றுவிடாது, யாருடைய கையை பிடித்தோ, காலை பிடித்தோ அல்லலுறும் மக்களுக்கு சேவை செய்பவனோ உண்மையான அரசியல்வாதி.
எமக்கு நம்பிக்கையான வட்டாரங்களிலிருந்து கிடைக்கபெற்ற ஓர் முக்கியமான தகவலை முன்னெச்சரிக்கையாக இங்கு கொடுக்க விரும்புகிறேன்.
ஓர் நாட்டில் நடைபெறும் ஜனநாயக தேர்தலிற்கு, வெளிநாடுகளிலிருந்து, விசேடமாக மேற்கு நாடுகளிலிருந்து நிதி அனுப்புவது என்பது அவ் நாட்டு சட்டங்களிற்கு முராணனாது.
இலங்கைத்தீவில் இறுதியாக நடைபெற்று தேர்தலிற்கு வெளிநாடுகளிலிருந்து சென்ற நிதி பற்றிய தகவல்களை, சிறிலங்காவின் புலனாய்வு பிரிவினர், மேற்கு நாடுகளிற்கு கொடுக்கும் நோக்குடன், தகவல் திரட்டி வருவதாக அறிகிறோம்.
இறுதியாக, ஊர்காவற்துறையில் குண்டு விழும்பொழுது, கோப்பாயில் துவக்கு தூக்கியதற்கு சமனாக. காலம் கடந்த ஞானமும், காலம் கடந்த பதில்களும் அரசியல் சாணக்கியம் ஆகாது. இவ் செயற்பாடுகள் நிரந்தர எதிரிகளை நிச்சயம் உருவாக்கும் என்பது எமது அனுபவம்.