சிங்கள பேரினவாதம் ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்ய தயார் இல்லை. நாங்கள் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதால் என்ன பலன்.

36

 

ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்ய தயார் இல்லை. நாங்கள் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதால் என்ன பலன். நாங்கள் நாங்களாக இருக்கும் வரைக்கும், நாங்கள் பலமான ஒரு சக்தியாக இருக்கும் வரைக்கும் நாங்கள் ஒற்றுமையாகவும் பலமாகவும் இருக்கின்றோம் என்பதை உலகம் புரிந்து கொள்ளும் வரைக்கும் தான் எங்களுக்கு விடிவு சாத்தியமாக இருக்கும் என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

மன்னார் அடம்பனில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (2) மாலை இடம்பெற்றது.

இதன்போது கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழர்களாக நாங்கள் வாழ வேண்டும் என்றால் தமிழர்கள் தம்மை தேசிய இனமாக அடையாளப்படுத்தவேண்டும் என்றால் நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்களாக வாழ வேண்டும் என்றால் எம்மீதான அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும்.

இந்த அரசாங்கத்திற்கு தமிழர் தரப்பால் இரு பிரச்சினைகள் உள்ளது. ஒன்று ஜெனிவாவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம். தமிழர்கள் மீது இனப் படு கொலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் போர்க் குற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு உணவு அனுப்பாமல் கொல்லப்பட்டுள்ளார்கள்.

நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இருந்த போது 70 ஆயிரம் பேருக்கு தான் உணவும் அனுப்பப்பட்டது. குழந்தைகள் குண்டுத் தாக்குதல்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இதனை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனை அறிக்கை மூலம் ஆவணப்படுத்தி ஜெனிவாவுக்கு, ஏனைய உலக நாடுகளுக்கும் கொடுத்தவர் வேறு யாரும் இல்லை மன்னார் மறைமாவட்டத்தின் மறைந்த ஆயர் அமரர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள்.

எந்த அரசியல் கட்சிகளும் அதனை வழங்கவில்லை. நாங்கள் சாட்சியம் அளிக்கவில்லை. அதை வழங்கியது ஒரு மதத் தலைவர். அவர் அரசியல்வாதி இல்லை. தமிழ்த் தேசிய இனத்தை நேசித்ததால் தமிழ் இனம் பற்றி அவர் சிந்தித்தமையினால் இந்த இனத்திற்காக இந்த இனத்திற்கு எதிராக இடம்பெற்ற அநியாயத்தை உலகம் வரை கொண்டு சென்ற ஒரு உன்னதமான இறை தூதர் தான் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள்.

அவர் வழங்கிய ஆவணத்தை இன்று அழிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இலங்கைக்கு இந்த ஆவணம் ஒரு பாரிய தலையிடி எனவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

 

 

SHARE