சிம்மம் – ஆங்கில புத்தாண்டு ராசிப்பலன் 2023

191

ஆன்மபலம் நிறைந்த சிம்ம ராசியினருக்கு இந்த ஆங்கிலப் புத்தாண்டு சகல ஐஸ்வர்யங்களும் பெற்றுத் தரும் ஆண்டாக அமைய நல் வாழ்த்துக்கள்.

இந்த புத்தாண்டில் அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடிய வில்லையே என்ற மனக்குறை தீரும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம். திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். குருவின் சஞ்சாரம் மிகச் சாதகமாக இருப்பதால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும்.

சனி பகவான் கண்டகச் சனியாக அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் சிறு மன சஞ்சலம் இருக்கும். ராகு/கேதுக்களின் சஞ்சாரத்தால் பெரிய பாதிப்பு ஏற்படாது. இனி விரிவான பலன்களைப் பார்க்கலாம்.

குருவின் சஞ்சார பலன்கள்: சிம்ம ராசிக்கு 5,8-ம் அதிபதியான குருபகவான் ஏப்ரல் 22, 2023 வரை ராசிக்கு 8-ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். அதன் பிறகு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானம் சென்று ராகுவுடன் இணைந்து சனி பார்வை பெறுகிறார்.இதுவரை தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் சித்திக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் துரிதமாகும்.திருமணத்தடை அகலும். முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அருளும் உண்டாகும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.

புத்திர பிராப்தமும் கிடைக்கும்.பல வருடங்களாக புத்திர பாக்கியம் தடைபட்டவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக உகந்த காலம். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். தொழில் நிறுவனத்திற்கு நம்பிக்கையும், நன்றியும் உள்ள புதிய வேலையாட்கள் அமைவார்கள். சக ஊழியர்களால் அதிக நன்மை கிடைக்கும். அரசு உத்தியோகத்திற்கு முயற்சித்தவர்களுக்கு பணி நியமன ஆணை கிடைக்கும். வேலை பார்த்த இடத்தில் இருந்து வந்த பிணக்குகள் சீராகும். இது வரை நிரந்தர வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும்.

ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.சிலர் தொழில் மற்றும் உத்தியோக நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து செல்ல நேரும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். சிலர் பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவில் சென்று குடியேறுவார்கள். சிலர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், போன்ற பாலிசி எடுப்பார்கள்.

சனியின் சஞ்சார பலன்கள்: சிம்ம ராசிக்கு சனி பகவான் 6,7ம் அதிபதி. இதுவரை ராசிக்கு 6ம் இடத்தில் சஞ்சரித்த சனி பகவான் ஜனவரி 17, 2023 முதல் 7ம் இடத்தில் கண்டகச் சனியாக அமர்வதால் கணவன், மனைவிக்குள் சிறு கருத்து வேறுபாடு வந்து மறையும். பல நேரங்களில் சம்பந்திகள் சண்டையாகவும் மாற வாய்ப்பு உள்ளது. சிலருக்கு விவாகரத்து வரை செல்லும். சிலருக்கு கூட்டுத் தொழில் அல்லது கூட்டுக் குடும்பம் பிரியும். சில பிள்ளைகள் தவறான திருமணத்தால் குடும்பத்தை விட்டு பிரிவார்கள் . உறவினர்கள், நண்பர்களுக்கு பண உதவி செய்தால் திரும்ப வராது. அதுவே கணவன் மனைவி கருத்து வேறுபாடுக்கு காரணமாக அமையும்.

தொழில் கூட்டாளிகள் இடையே முறையான ஒப்பந்தம் போட்டு தொழில் நடத்த வேண்டும். பணம் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகையை கையாள்வதைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் என சுப விரயமும் உண்டாகும். அலைச்சல் மிகுந்த பயணம் அதிகரிக்கும். கடன் பெற்று அசையும், அசையாச் சொத்து வாங்குவீர்கள். புதிய கடன் பெற்று பழைய கடனை அடைப்பீர்கள். தனியார் நிறுவனத்தில் வேலை பார்பவர்களுக்கு கம்பெனி செலவில் வெளிநாடு சென்று பணிபுரியும் சந்தர்ப்பம் கிட்டும்.

ராசியை சனி பகவான் பார்ப்பதால் சிறு சோர்வு, சதி அலுப்பு அவ்வப்போது தோன்றி மறையும். அடிக்கடி கை கால்களில் உடம்புகளில் வலி இருந்து கொண்டே இருக்கும். நேரத்திற்கு உண்ண,உறங்க முடியாமல் வெறுமை உணர்வு இருக்கும்.மன நிறைவு இருக்காது. தனியாக அமைதியாக இருப்பதை மனம் விரும்பும்.

ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்: அக்டோபர் 30, 2023 வரை ராகு பகவான் 9ம் இடத்திலும் கேது பகவான் 3ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். அதன் பிறகு ராகு பகவான் எட்டாம் இடத்திற்கும், கேது பகவான் 2ம் இடத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.நேர்வழி, குறுக்குவழி என பணம் பல வழிகளில் பணம் பையை நிரப்பும். சேமிப்புகள் முதலீடுகள் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயர வாய்ப்பு உள்ளது. வீடு , வேலை, தொழில் மாற்றம் செய்ய நேரும் .நீண்டகாலமாக தொல்லை கொடுத்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும். நண்பர்களால் சில அசவுகரியங்கள் ஏற்பட்டாலும் ஆதாயமும் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.ஒரு சிலர் வெளிநாடு, வெளி மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்து மகிழ்வீர்கள்.

திருமணம்: ராசிக்கு ஏப்ரலில் குருப் பார்வை கிடைக்கும். ராசிக்கு 7ம் இடத்தில் சனி பகவான் கண்டகச் சனியாக அமர்வதால் இழுபறிக்குப் பிறகு திருமண வாய்ப்பு கூடி வரும். தசா புத்தி சாதகமற்றவர்களுக்கு திருமண வாய்ப்புகள் தள்ளிப்போகும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும் வாய்ப்பும் உள்ளது. சிலருக்கு மறு விவாகம் ஏற்படும்.

பெண்கள்: பெண்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். அதற்குக் தகுந்த வரவும் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலைப்பளுவும் கூடும். பெரிய அளவில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். தேவையற்ற எதிர்பார்ப்புகளைக் குறைத்தால் சிரமங்களை எளிதில் கடந்து விடலாம். தொழில் உத்தியோகத்தில் நிதானம் தேவை உடல் ஆரோக்கியத்தில், உணவு விசயத்தில் அக்கறையும் கவனமும் தேவை.

மாணவர்கள்: பிள்ளைகள் கல்வியில் நல்ல நாட்டமும், ஆர்வமும் அதிகரிக்கும். நல்ல மதிப்பெண் பெறுவார்கள். சிலருக்கு உயர் ஆராய்ச்சி கல்வி படிக்க வாய்ப்பு உள்ளது.விரும்பிய கல்வியை கற்க வெளியூர், வெளிநாடுகளில் உள்ள விரும்பிய கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும்.

மகம்: வாழ்க்கையே போராட்டமாக இருந்தவர்களுக்கு சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதியான வாழ்க்கை அமையும். அன்றாடம் கூலி வேலை செய்து சம்பாதித்தவர்கள் சொந்த தொழில் செய்து பெரும் வருமானம் ஈட்டும் நேரம். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் வாழ்க்கை தரம் உயரும் . தன வரவு சிறக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும்.குடும்பம் மகிழ்சியாக இருக்கும். முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து முயற்சிகளும் சிறு முயற்சியில் வெற்றி வாய்ப்பை தேடித்தரும்.வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். போட்டி பொறாமைகள் இருந்தாலும் சமாளித்து வெற்றி போடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தை திட்டமிட்டு பயன்படுத்தினால் நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் ப்ரத்யங்ஹரா தேவிக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபட அவமானம், தீராத நோய், கடன், வம்பு வழக்ககுகள் அண்டாது. பூரம்: திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப் போகிறது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குறைந்த விலைக்கு பொருள் வாங்கி அதிக விலைக்கு விற்பதில் கைதேர்ந்தவர்களாகி விடுவீர்கள்.பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். ஒரு சிலர் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்து சம்பாதிப்பார்கள்.விவசாயிகளுக்கும், கால்நடை வளர்பவர்களுக்கு ஏற்ற காலம். தேவையற்ற அலைச்சல், ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகலாம். திறமைக்கும், தகுதிக்கு ஏற்ப வேலையில் முன்னேற்றமும், சம்பள உயர்வும் கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. மேலதிகாரிகளின் தொல்லைகள், பிரச்சினைகள் நீங்கும். பணிச் சுமை அதிகமாக இருப்பதால் ஒய்வு நேரம் குறையும்.

பரிகாரம்: வயதான சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம் தந்து ஆசி பெறவும்.

உத்திரம் 1: உங்களின் எண்ணங்கள் , திட்டங்கள் நிறைவேறும்.பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டுப் பணம், ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். வீட்டில் சுப நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆடம்பர விழாக்களில் கலந்து கொள்வீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் வாக்கிற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். துணிச்சல் அதிகரிக்கும். புதிய தெம்பு மற்றும் தைரியத்துடன் வீர நடை போடுவீர்கள்.பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை நடக்கலாம். கணவன் மனைவி இடையை சின்னச் சின்ன சலசலப்புகள் வரலாம். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. காதலர்கள் விட்டுக்கொடுத்து செல்லவும். வயதானவர்கள் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளிடம் சென்று செட்டிலாகலாம்.

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வர சிறப்பான யோகங்கள் அதிகரிக்கும். சிம்ம ராசியினர் புத்தாண்டில் சென்று வழிபட வேண்டிய ஸ்தலம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் அருள்மிகு சனீஸ்வரர் கோவில். கண்டக சனியின் ஆதிக்கம் இருப்பதால் சிம்ம ராசியினர் இங்கு சென்று வழிபட ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் நீங்கும்.

maalaimalar

SHARE