சிறுவர்களுக்கு ஏற்படும் துஸ்பிரயோகத்தை தடுக்கும் வகையிலும் அவர்களுக்கு நாளாந்தம் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துகும் வகையிலும் எதிர்காலத்தில் சிறுவர்களை பாதுகாக்குமாறும் இன்று நாடளவிய ரீதியில் தேசிய கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது.
இளைஞனர் சேவைகள் மன்றம், ஸ்ரீலங்கா இளைஞனர் கழக சம்மேளனம் என்பன இணைந்து இப்பேரணியை நடாத்தியுள்ளது.
அந்த வகையில் மட்டக்களப்பு கல்குடா கல்வி வயலயத்திற்குப்பட்ட சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம், சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயம், செங்கலடி மத்திய கல்லூரி மற்றும் வாகரை, மட்டக்களப்பு போன்ற பல பகுதிகளிலும் உள்ள பாடசாலை மாணவர்களினால் இவ் கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என்ற கோசத்துடன் பேரணியாக ஒன்று திரண்ட மட்டக்களப்பு சித்தாண்டி மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் “பிள்ளைகளை உயிர்போல் பாதுகாப்போம், துஸ்பிரயோக நயவஞ்சகர்களை கடுமையதாக தண்டிப்போம், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து” போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் கவனயீர்ப்பு பேரணியில் பாடசாலையின் முன்வாயில் நின்று தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதன்போது குறித்த பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞனர் சம்மேளனத்துடன் இணைந்து பாதசாரிகள் மற்றும் போக்குவரத்து வாகனங்களை நிறுத்தி சிறுவர்களுக்கு ஏற்படும் துஸ்பிரயோகத்தை தடுப்பது தொடர்பான துண்டுப் பிரசுரங்களை வழங்கியிருந்தனர்.
பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாப்போம்! வவுனியாவில் பேரணி!
சிறுவர்களை வாழ விடுங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க அனைவரும் ஒன்றிணையுங்கள்’ என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் வவுனியாவில் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இருந்து வவுனியா பேரூந்து தரிப்பிடம் வரை இந்த பேரணி இடம்பெற்றுள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
வவுனியா பிரதேச செயலாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்பேரணியில், இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர்கள், வடமாகாணசபை உறுப்பினர் எம். தியாகராசா, திவிநெகும அபிவிறுத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.