
சிறைச்சாலைகளிலிருந்து மேற்கொள்ளப்படும் பாதாள உலகக்குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு செயற்பாட்டாளர்கள் மேற்கொள்ளும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அண்மைய நாட்களில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்று வந்த பாதாள உலகக்குழு செயற்பாடுகளுக்கு, சிறைச்சாலைகளிலிருந்து ஏதேனும் ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
அவ்வாறு ஏதேனும் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் சிறைச்சாலைக்குள் இருந்துகொண்டே ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பாதாள உலகக்குழு செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள் பற்றி தெரிந்த ஏனைய கைதிகளிடமிருந்தும் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட உள்ளன.
பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் மட்டுமன்றி ஏனைய கைதிகளினால் சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் மற்றும் மோசடிகளை தடுத்து நிறுத்த சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.
இதன் முதல்கட்டமாக சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு கிரமமாக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.