சி.எஸ்.என் விசாரணை – ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலையீடு கிடையாது

283

சி.எஸ்.என் தொலைக்காட்சி சேவையில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி மற்றும் அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பாக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையில் எவ்வித தலையீடுகளும் காணப்படவில்லை என சட்ட மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சர் சாகல ரத்னநாயக்க தெரிவித்துள்ளார்.

சி.எஸ்.என். தொலைக்காட்சி சேவையில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி மற்றும் அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விதத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிக்கையொன்றின் மூலம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்காது விசாரணைகளை தொடர முடியாத சூழல் ஏற்பட்டமையை அடுத்தே பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாக நிஷாந்த ரணதுங்க கடமையாற்றியுள்ள போதிலும், மின்னஞ்சல் ஊடாக தகவல் பரிமாற்றத்தின் போது மாத்திரம் நிறுவனத்தின் தலைவராக கடற்படை லெப்டினன் யோசித ராஜபக்ஸ கடமையாற்றியுள்ளமை தெளிவாக தெரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிறுவனத்தின் ஆவணங்களின் பிரகாரம் பங்குதாரர்களாக ரோஹன் வெலிவிட, கவிஷான் திஸாநாயக்க, ரவிநாத் பெர்ணான்டோ, ஷாடியா கருணாவிட ஆகியோர் செயற்பட்டுள்ளதாக அமைச்சர் சாகல ரத்னநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முழுமை பெற்றதன் பின்னர் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்காக சட்ட மாஅதிபரிடம் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் சட்ட மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சர் சாகல ரத்னநாயக்க தெரிவித்துள்ளார்.

live-stream-img

SHARE