சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்களை உடனடியாக கல்வி அமைச்சுக்கு தெரிவிக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் பாதிப்புக்கு உள்ளான பாடசாலைகளின் அதிபர்களிடம் கோரிக்கை விடுக்கின்றார்.
இன்று (11.08.2018) வெள்ளவத்தை சபையார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இந்த விடயம் தொடரபில் உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் தற்போது நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இதனால் பாடசாலைகள் பாதிக்கப்படுகின்றன.
தற்போது பாடசாலை விடுமுறை என்பதால் மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாவிட்டாலும் பாடசாலைகளுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிபர்கள் விடுமுறை என கருதி வீடுகளில் இருக்காமல் பாடசாலைகளுக்குச் சென்று பாடசாலையின் நிலைமையினை உடடினயாக பார்வையிட்டு பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்ததால் உடனடியாக கல்வி அமைச்சுக்கும் எனக்கும் அறிய தரவும். அவ்வாறான நிலையில் பாதிப்புக்கு உள்ளாகும் பாடசாலைகளை பாடசாலை விடுமுறை முடிந்து ஆரம்பிக்கும் முன்னர் மீள் நிலைக்கு கொண்டு வர முடியும். அத்துடன் தற்போது கல்வி பொது உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை நடைபெற்று வருகின்றது. இந்த பரீட்சை நடைபெறும் நிலையங்களில் பாதிப்புகள் ஏற்பட்டால் பரீட்சை நிலைய மேற்பார்வையாளர்கள் பரீட்சை திணைக்களத்தின் ஊடாக கவ்வி அமைச்சுக்கு அறிய தரவும். அவ்வாறான நிலையில் மாணவர்களுக்கும், பாடசாலைகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ள முடியும் என்று கூறினார்.