சுகாதார அமைச்சர் ராஜிதவிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ள ரிஷாட் பதியுதீன்

182

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

சுகாதார அமைச்சருக்கு அவர் இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும்,

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் வடக்கிலுள்ள சிலாவத்துறை வைத்தியசாலை, கிழக்கில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, கிண்ணியா தள வைத்தியசாலை மற்றும் வட மேல் மாகாணத்திலுள்ள புத்தளம் தள வைத்தியசாலை ஆகியவற்றிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நிதியை ஒதுக்கி தர வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளில் மேற்கூறப்பட்ட வைத்தியசாலைகளும் உள்ளடங்குகின்றது. இதுவரையும் இந்த வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படாததனால், மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

ஒழுங்கான வசதிகள் இல்லாததனால் தூர இடங்களுக்கு மருத்துவத்திற்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கியம் நிலவுவதாகவும், சில நோயாளர்கள் இறப்பினை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் கிண்ணியா மக்களை பெரிதும் பாதித்ததுடன், அந்த பிரதேசத்தில் அமையப்பெற்றிருக்கும் வைத்தியசாலைகளில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் அண்மைக்காலத்தில் வலிந்து திணிக்கப்பட்ட சில அபிவிருத்தி நடவடிக்கைகளால் ஏற்பட்ட சூழலியல் பாதிப்புக்கள் இந்த மக்களை அடிக்கடி உபாதைக்குள்ளாகி வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வருடம் புத்தளம் தள வைத்தியசாலை மற்றும் சிலாவத்துறை வைத்தியசாலைகளுக்கு ராஜித சேனாரத்னவை தாம் அழைத்துச் சென்று வைத்தியசாலையின் வளப்பற்றாக்குறை, ஏனைய குறைபாடுகள் பற்றி நேரில் காண்பித்ததையும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்ததையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது கடிதத்தில் ஞாபகப்படுத்தியுள்ளார்.

SHARE