ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு தனியாக செயற்பட அதிகாரமில்லை என துமிந்த திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விரும்பாத காரணத்தினால் அவர்களுக்கு எதிர்க்கட்சியில் அமர சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளது. அதற்காக அவர்கள் கூட்டு எதிர்க்கட்சி என்ற பெயரில் செயற்பட முடியாது.
சுதந்திரக்கட்சி மற்றும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை மத்திய செயற்குழுவே தீர்மானிக்க வேண்டும். அதன் தீர்மானத்தை அனைவரும் மதித்து நடக்க வேண்டும்.
அதைவிடுத்து ஒவ்வொருவரும் தனித்தனியாக தீர்மானம் எடுக்கவோ, சுயாதீனமாக செயற்படவோ கட்சிக்குள் யாருக்கும் அனுமதியில்லை. கட்சியின் யாப்பு விதிகளின் பிரகாரம் அனைவரும் கட்சியின் தீர்மானத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதற்கு சட்டப்படி கட்டுப்பட்டுள்ளனர்.
இதனை ஏற்றுக் கொள்ளவிரும்பாத எவரும் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வெளியேறலாம் என்றும் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.