சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி

273
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின்  68 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் எதிர்ப்பு வெளியிடும் விதமாகவே கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளதாக பல்கழைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டன. இதையடுத்து அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் கொடிகளும் உடனடியாக அகற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் ஒருவித அச்ச சூழல் காணப்பட்டது.

இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினம் இன்று வியாழக்கிழமை கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி முக்கிய அலுவலகங்கள், நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் என்பவற்றில் நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன், பறக்கவிடப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே இன்று முற்பகல்10.30 மணியளவில் யாழ்.பல்கலைக்கழகத்தின் முக்கிய கட்டடங்களான கைலாசபதி கலையரங்கு, நூல் நிலையம் என்பவற்றில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

எனினும் உடனடியாக அங்கு விரைந்த பொலிஸார் கொடிகளை அகற்றியதுடன். அப்பகுதியில் நின்றவர்களையும் பயணித்தவர்களையும் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தினர். இதனால் அப்பகுதியில் ஒருவித அச்ச சூழல் காணப்பட்டது.

SHARE