ஆனந்தசுதாகரனின் புதல்வி மற் றும் புதல்வனின் பரிதாப நிலை என்பது இந்த உலகத்தையே உசுப்பியிருக் கின்றது. ஆனால் எங்கள் நாட்டு ஜனாதிபதியை இன்னும் உசுப்பவில்லையா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆனந்தசுதாகரன் விடுதலை தொடர்பான கையெழுத்துவேட்டையில் கலந்துகொண்டு கையொப்பமிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆனந்தசுதாகரனின் புதல்வி மற்றும் புதல்வனின் பரிதாப நிலை என்பது இந்த உலகத்தையே உசுப்பியிருக்கின்றது. ஆனால் எங்கள் நாட்டு ஜனாதிபதியை இன்னும் உசுப்பவில்லையா? அவர் இந்த விடயம் தொடர்பில் கையாள வேண்டும். ஜனாதிபதிக்கு மாத்திரம் தான் ஒரு ஆயுள் தண்டனை கைதியை விடுதலை செய்வதற்கான அதிகாரம் இருக்கின்றது.
அவரை ஒரு மனிதாபிமானம் உள்ள ஜனாதிபதியாக நாங்கள் அனைவரும் பார்க்கின்றோம். எனவே அவ்வாறான ஒரு மனிதாபிமான விடயத்தை செய்ய வேண்டும் என்றுதான் மட்டக்களப்பு இளைஞர்கள், மக்கள் இணைந்து கையொப்பம் பெறுகின்ற நிகழ்வை மேற்கொள்கின்றோம்.
நிச்சயமாக அவர் விடுதலை செய்யப்பட வேண்டும். அது மட்டுமல்ல இன்றும் சிறைச்சாலைகளில் பல துன்பியல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்ற எமது தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருக்கின்றது. 2015இல் ஆட்சி மாற்றத்தின் போது ஜனாதிபதியிடம் எமது தலைமை முன்வைத்த முதற் கோரிக்கை இந்த தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான். அப்போது அதனை ஜனாதிபதி ஏற்றிருந்தார். ஆனால் அதனை முழுமையாகச் செய்யவில்லை. அவர்கள் அனைவரும் முழுமையாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
அதே நேரத்தில் உடனடியாக ஆனந்தசுதாகரன் விடுதலை செய்யப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நாங் கள் வெவ்வேறு வழிகளில் மனிதா பிமான போராட்டங்களை நடத்தி ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கின்ற விடயத்தை மேற்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.