சென்னையில் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 11 வயது சிறுமிக்கு, போதை ஊசி செலுத்தியமை தொடர்பில் பொலிஸார் அதிரடி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது சிறுமியை, 17 காமக்கொடூரன்களால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில், இந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்
11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இந்த வழக்கை மிகவும் கவனமாக விசாரித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த தகவல் அடிப்படையில் தான் 17 பேரையும் கைது செய்துள்ளோம். தற்போதைய நிலவரப்படி இந்த வழக்கில் 17 பேர் தான் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் சிறுமியை பெரும்பாலும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலும், பள்ளிக்கு செல்லாத நேரத்திலும், தங்களது இச்சைக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். பெரும்பாலும் கழிவறையில் வைத்தே பலாத்கார சம்பவம் நடந்துள்ளது.
“நீல நிறத்தில் உள்ள போதை ஊசியை தனக்கு கத்தி முனையில் மிரட்டி போட்டுவிடுவார்கள் என்றும், போதை ஊசியைப் போட்ட உடன் மயக்க நிலை வந்துவிடும்” என்றும் சிறுமி விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அந்த போதை ஊசியின் பெயர் என்ன? என்பது பற்றி சிறுமியால் கூறமுடியவில்லை. இதுபற்றி கைதான 17 பேரிடமும் விசாரித்துவிட்டோம். அவர்கள் போதை ஊசி பயன்படுத்தவில்லை என்று மறுத்துவிட்டனர். இருந்தாலும் இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். கைது செய்யப்பட்டவர்களை தேவைப்பட்டால் மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம். விரைவில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.என தெரிவித்துள்ளார்.
நேற்று குறித்த வழக்கு தொடர்பாக, உயர் பொலிஸ் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான முக்கியமான தடயங்களை பொலிஸார் சேகரித்துள்ளனர். மேலும். குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரும், புழல் மத்திய சிறையில், தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அடைக்கப்பட்டுள்ள பகுதிக்கு மற்ற கைதிகள் செல்ல சிறை காவலர்கள் அனுமதிக்கவில்லை. மற்ற கைதிகள் இவர்களை தாக்கக்கூடும் என்பதற்காக இந்த முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.