சேற்றுப்புண் எதனால் ஏற்படுகிறது?

367
எப்போதும் தண்ணீரில் நின்றுகொண்டிருப்பவர்களுக்கும், மழைகாலத்திலும் சேற்றுப்புண் ஏற்படுகிறது.
காலில் உள்ள விரல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தோல் சுருங்கி வெண்மை படர்ந்து அழுக்கு போல் காணப்படுவது பூஞ்சை தொற்று இதில் சற்று அரிப்பும், துர்நாற்றமும் இருந்தால் அது சேற்றுப்புண் எனப்படும்.

காரணம் என்ன?

மழைநீர், சேறு, சுகாதாரமற்ற தண்ணீர் ஆகியவற்றில் நீண்டநேரம் நிற்பது செருப்பு அணியாமல் கரடுமுரடான பாதையில் நடப்பது, தரமற்ற செருப்புகளை தொடர்ந்து பயன்படுத்துவது, பாதங்களை அழுக்கு போக தேய்த்துக் குளிக்காதது, உடல் எடை அதிகமாக இருப்பது போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் வெளியில் சென்று வருபவர்கள் தோட்ட வேலை வீட்டு வேலை செய்பவர்கள் கை கால்களை சுத்தமாக கழுவாததாலும் நாள்பட்ட நோய்கள், வைட்டமின் சத்து குறைவு, மருந்து ஒவ்வாமை, தொற்றுநோய் கிருமிகள் தீராத மலக்கட்டு போன்றவை இருந்தாலும் சேற்றுப் புண் பித்த வெடிப்பு ஏற்படலாம்.

சொரியாசிஸ் என்ற காளான் பூஞ்சை படை, தோல் நோய் , தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்பட்ட தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வரலாம்.

அறிகுறிகள்

கால் ஓரங்களில் வெடிப்பு, புண், குறிப்பாகக் குதிகாலில் வெடிப்பு, புண், நடந்தால் தாங்கமுடியாத வலி, குத்தல், நீண்ட நேரம் நிற்க முடியாமை, கால்களில் செருப்பு இல்லாமல் நடக்க இயலாமை, செருப்பு போட்டாலும் ஒரு சிலருக்குத் தாங்க முடியாத வலி, வேதனை, சில நேரங்களில் வெடிப்பிலிருந்து ரத்தம் வருதல், கைவிரல், கால்விரல் இடுக்குகளில் புண், வலி, நீர் வடிதல், நெறி கட்டுதல், காலில் ஷூ, சாக்ஸ் அணிய முடியாமை, ஒருவித துர்நாற்றம் போன்றவை அறிகுறிகளாக காணப்படும்.

தடுப்பது எப்படி?

வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் கை, கால், முகத்தை நன்கு கழுவ வேண்டும்.

குளிக்கும்போது உடலின் அழுக்கு, மலம், ஜலத்தை வெளியேற்ற வேண்டும். ஒழுங்கற்ற தரைத் தளங்களில் காலணி இல்லாமல் நடப்பதைத் தவிர்க்கவும். தரமற்ற காலணிகளை அணிவதைத் தவிர்க்கவும்.

மருந்துகள்

வாரம் ஒருமுறை அல்லது இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்துகளையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ளக் கூடாது.

சத்துள்ள காய், கீரை, பயறு, பழ வகைகளைத் தினசரிச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தோல் நோய், வேறு நோய்கள் இருந்தால் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

முக்குற்றங்களான வாத, பித்த, கபத்தைச் சமநிலைபடுத்தக்கூடிய மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். சிவனார்வேம்பு, லவங்கப்பட்டை, இலவங்கபத்திரி, சிறுநாகப்பூ, ஏலம் சேர்த்த மருந்து, கார்போக அரிசி, ஆவாரம்பூ, ரோஜா மொக்கு, கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், கசகசா, பூலாங்கிழங்கு, சந்தனம் சேர்ந்த மருந்து, பரங்கிப்பட்டை சேர்ந்த மருந்து, அன்னபேதி, நற்பவளம் சேர்ந்த மருந்துகள் நல்ல பலனைத் தரும்.

SHARE