ஜனாதிபதி தடைவிதித்தும் 15 இரசாயன கொள்கலன்களை விடுவித்தது யார்?

322
சிறுநீரக நோய்க்கு காரணமான இரசாயன பொருளொன்று 15 கொள்கலன்களில் சட்டவிரோதமாக தருவிக்கப்பட்டுள்ளது. இவற்றை விநியோகிக்க ஜனாதிபதி தடைவிதித்துள்ள போதும் சுங்க திணைக்கள அனுமதியின்றி அவை விடுவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இதன் பின்னணியில் இரகசிய கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றிருப்பதாக சந்தேகம் காணப்படுவதால் அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

நான் விவசாய அமைச்சராக இருந்த போது இந்த வகை இரசாயனப் பொருட்களை ஆறு மாவட்டங்களில் தடை செய்தேன். ஏனைய பிரதேசங்களிலும் தடை செய்ய திட்டமிடப்பட்டது.

ஆனால் 15 கொள்கலன்களின் இந்த இரசாயனப் பொருட்கள் சட்டவிரோதமாக தருவிக்கப்பட்டது. சுங்கத் திணைக்களம் இவற்றை தடுத்து வைத்தது. இதில் 10 வருடங்களுக்கு தேவையான இரசாயனப் பொருட்கள் கொண்டு வரப்பட்டிருந்தன.

இந்த இரசாயனப் பொருட்களுக்கு நாடுபூராவும் தடைவிதிப்பதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

ஆனால் அவை சுங்கப்பிரிவின் அனுமதியின்றி விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் சுங்கப் பணிப்பாளர் நாயகம் பதவி விலகியுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவையும் மீறி இவை வெளியில் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதன் மூலம் ஜனாதிபதியின் கெளரவத்திற்கு அரசாங்கம் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொள்கலன் வெளியிடப்பட்ட விவகாரம் குறித்து நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு விசாரணை நடத்த வேண்டும்.

SHARE