அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகப் போவதில்லை என்று தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடுகிற டொனால்டு டிரம்ப் (வயது 70), தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
அவர் கடந்த 2005ம் ஆண்டு பெண்களைப் பற்றி மிக மோசமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
அதில் அவர், பெண்களிடம் தான் மோசமாக நடந்து கொண்டது பற்றி குறிப்பிட்டதுடன், பிரபலமாக இருக்கிற போது எதையும் ஒருவர் செய்யலாம் என கூறியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அவரது சொந்தக் கட்சியிலேயே கடும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
தலைவர்கள் பலரும் அவருக்கு அளித்துள்ள ஆதரவை திரும்பப் பெற்றதுடன், போட்டியில் இருந்து அவர் விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்திய அமெரிக்கர்கள் பலரும் தங்களது ஆதரவை ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் டிரம்ப் தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த மன்னிப்பை அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று டிரம்பின் குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் தான் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகப்போவதில்லை என்று டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் டுவிட்டரில், “ ஊடகத்தினரும், மற்றவர்களும் மிக மோசமாக நான் போட்டியிலிருந்து விலக வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் நான் ஒருபோதும் போட்டியில் இருந்து விலக மாட்டேன். என் ஆதரவாளர்களை ஒருபோதும் கீழே விழ விடமாட்டேன் என கூறியுள்ளார்..