ஜேர்மனி நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றி விடுவார்கள் என்ற அச்சத்தில் பெரும்பாலான அகதிகள் ஜேர்மனிக்குள் நுழைந்தவுடன் கடவுச்சீட்டுகளை கிழித்து எறிந்துவிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜேர்மனியில் புகலிடம் கோரி முறையான விண்ணப்பங்களை அளிக்காத மற்றும் தகுதியில்லாத அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை அரசு இந்த வாரம் தொடங்கவுள்ளது.
குறிப்பாக, தகுதியில்லாத பால்கன் நாடுகளை சேர்ந்த அகதிகளை ஜேர்மனியை விட்டு உடனடியாக வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், அல்பேனா, கோசோவோ மற்றும் மோண்டேனிக்ரோ ஆகிய நாடுகள் பாதுகாப்பானவை என ஜேர்மன் அரசு ஏற்கனவே கூறியுள்ளதால், அந்நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு புகலிடம் அளிக்க முடியாது எனவும் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும் அரசிற்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஜேர்மனிக்குள் நுழையும் பெரும்பாலான அகதிகள் உடனடியாக அவர்களது கடவுச்சீட்டுகளை அழித்து விடுகின்றனர். அதாவது, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றி விடுவார்கள் என்ற அச்சத்தில் அகதிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதனால், தகுதியில்லாத அகதிகளில் 30 சதவிகிதத்தினரை மட்டுமே நாட்டை விட்டு வெளியேற்றும் நிலை அரசிற்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செர்பியா, போஸ்னியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 1,50,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
|