தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி தான் சிறந்த அணி என்று ரவி சாஸ்திரி கூறியதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, 3-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
4வது டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு அருகில் வந்த இந்தியா, துடுப்பாட்ட வீரர்களின் மோசமான ஆட்டத்தால் தோல்வியை தழுவியதால் தொடரையும் இழந்தது.
இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், விராட் கோஹ்லி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து, ரவி சாஸ்திரி கூறுகையில் ‘நம் வீரர்கள் முடிந்த அளவிற்கு போராடியும், இங்கிலாந்து அணி ஒருபடி மேல் இருந்து வெற்றி பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 9 போட்டிகள் உள்பட 3 தொடர்களை வென்றுள்ளோம்.
குறிப்பாக சொல்லப்போனால், கடந்த 15-20 ஆண்டுகளில் இருந்த இந்திய அணியை விட இப்போது உள்ள அணி தான் சிறந்த அணி. முந்தைய அணிகளில் சிறந்த வீரர்கள் இருந்தும் குறுகிய காலத்தில் இதுபோன்று ஓட்டங்களை அடித்தது இல்லை’ என கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில்,
’1993ஆம் ஆண்டுக்கு பிறகு, 2015ஆம் ஆண்டு வரை பல ஆண்டுகளாக இலங்கையில் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றவில்லை. ஆனால், அந்த காலகட்டங்களில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தொடரை இந்தியா கைப்பற்றியது.
நான் என்ன கூற வருகிறேன் என்றால், 80-களின் இந்திய அணி மேற்கு இந்திய அணி மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்தில் தொடரை வென்றுள்ளது. கடைசியாக இங்கிலாந்து தொடரை கடந்த 2007ஆம் ஆண்டு, ராகுல் டிராவிட் தலைமையில் இந்தியா கைப்பற்றியது.
அதே டிராவிட் தலைமையில் 2005ஆம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா, வரலாற்றில் முதன் முறையாக தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.
இந்த தொடர் வெற்றிகளுக்கு ஒரு அணித்தலைவராக டிராவிட்டின் பங்களிப்பு குறைவு என்றாலும், வெளிநாடுகளில் தொடரை வெல்லும் வலிமையுடைய வீரர்கள் அப்போதைய அணியில் இருந்தனர். இதை ரவி சாஸ்திரிக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
