அமெரிக்காவில் அரசு மாற்றம் தொடர்பாக அந்நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தனது அரசின் முக்கியப் பதவிகளுக்கு யார் யாரை நியமிப்பது என்பது குறித்து, இன்றைக்குள் முடிவு செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 8-ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி அவர் அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஒபாமாவிடம் இருந்து சுமுகமாக அரசு மாற்றம் செய்வதற்கு உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்துள்ளார். இந்நிலையில், தனது அரசின் உயர் பதவிகளுக்கு யாரை நியமிக்கலாம் என்பது குறித்து முடிவெடுப்பதற்காக டொனால்ட் டிரம்ப் , நியூயார்க்கில் உள்ள தனது இல்லத்தில் இருந்து நேற்று, நியூஜெர்ஸியில் பெட்மினிஸ்டர் என்ற இடத்தில் உள்ள டொனால்ட் டிரம்ப் தேசிய கோல்ஃப் கிளப்பிற்கு புறப்பட்டுச் சென்றார்.
ஏற்கெனவே அட்டர்னி ஜெனரல் பதவிக்கு அமெரிக்க செனட்டர் ஜெவ்செஸ்சன்ஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு முன்னாள் ராணுவத் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் மைக்பிளேன், மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குநர் பதவிக்கு மைக் போம்பியோஆகியோரை தேர்வு செய்துள்ளார். இந்நிலையில், எஞ்சிய உயர் பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இன்றைக்குள் முடிவெடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, கடந்த 2012ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட முன்மொழியப்பட்டவரும், டொனால்ட் டிரம்ப் -ன் தேர்தல் பிரச்சாரத்தை கடுமையாக எதிர்த்தவருமான மிட் ரோம்மி -க்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்க டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருவதாகவும், இதுதொடர்பாக வார இறுதியில் மிட் ரோம்மி -ஐ சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு ஹாலிவுட் நட்சத்திரங்களிடையே வரவேற்பும்-எதிர்ப்பும் காணப்படுகிறது. எக்காரணத்தைக் கொண்டும் பேச்சு சுதந்திரத்திற்கு தடை ஏற்படக்கூடாது என ஆஸ்கர் விருதுபெற்ற நடிகை மேரியான் கோட்டிலாடு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தனக்கு எதிரான போராட்டங்களை ஊடகங்கள் தூண்டி விடுவதாக குற்றம்சாட்டிவந்த டொனால்ட் டிரம்ப் , தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு போராட்டக்காரர்கள் செயல்படுவதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.