இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட், மகேந்திர சிங் டோனி தனக்கு அண்ணன் போன்றவர் என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1ஆம் திகதி தொடங்க உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர்- துடுப்பாட்ட வீரரான ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு குறித்து அவர் கூறுகையில், ‘டோனி எனக்கு அண்ணன் போன்றவர். அவரிடம் எப்போதெல்லாம் ஆலோசனை கேட்க விரும்புகிறேனோ, அப்போதெல்லாம் அவரிடம் ஆலோசனைகளை கேட்டுள்ளேன்.
ஐ.பி.எல் தொடரில் கூட அவரிடம் ஏராளமான யோசனைகளையும், ஆலோசனைகளையும் பெற்றுள்ளேன். டோனி எனக்கு விக்கெட் கீப்பிங்கில் பல்வேறு குறிப்புகளை வழங்கியுள்ளார்.
விக்கெட் கீப்பிங் செய்யும் வீரருக்கு கண்கள் கைகளின் ஒருங்கிணைப்பும், உடலின் சமநிலை மிகவும் முக்கியம் என என்னிடம் பலமுறை கூறியுள்ளார்.
இது எனக்கு இப்போது வரை மிகவும் உபயோகமாக இருக்கிறது. இந்திய அணியின் ஓய்வறையில் டோனி இருந்தாலே ஒரு உற்சாகம் இருக்கும். அவர் எப்போதுமே எனக்கு ஆதரவாக பல்வேறு கட்டங்களில் உதவியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் நான் சேர்க்கப்பட்டது என் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. அந்தச் செய்தியை கேட்ட நிமிடம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். அப்போது நான் துள்ளிக் குதித்தேன்’ என தெரிவித்துள்ளார்.