மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத் தொடரின் முதல் போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். அதன்படி அந்த அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக கிரெய்க் பிராத்வைட், டேவன் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் விரைவில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய பாவெல் 38 ஓட்டங்களையும் ஷாய் ஹோப் 44 ஓட்டங்களையும் ரோஸ்டன் செஸ் 38 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் 40 ஓட்டங்களுடன் வெளியேறினர்.
தொடர்ந்து களமிறங்கிய ஷேன் டாவ்ரிச் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 84 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இந் நிலையில் 246 ஓட்டங்களுடன் நேற்று இரண்டாம் நாள் ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 414 ஓட்டங்களை குவித்து தனது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. இந்த இன்னிங்ஸில் ஷேன் டாவ்ரிச் 125 ஓட்டங்களுடன் ஆட்மிழக்காது இருந்தார்.
இலங்கை அணி சார்பாக பந்துவீசிய லஹிரு குமார 4 விக்கெட்டுக்களையும் சுரங்க லக்மால் 2 விக்கெட்டுக்களையும் ரங்கன ஹேரத் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந் நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் ஆர்பித்த இலங்கை அணி ஆட்ட நேர முடிவின்போது மூன்று விக்கெட்டுக்களை இழந்து 31 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அணியின் தலைவர் தினேஸ் சந்திமல் 3 ஓட்டங்களுடனும் ரோஷான் சில்வா ஒரு ஓட்டத்தையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.