இழப்புகள் போராட்டங்கள் எல்லாம் தமிழரசுக் கட்சிக்குமட்டும்தான் சொந்தம் என்று நினைத்துவிடாதீர்கள். அதைவிட பன் மடங்கு போராட்டங்களையும் இழப்புக்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருக்கின்ற ஏனைய அமைப்புகளும் சந்தித்திருக்கின்றன என்பதை தமிழரசுக் கட்சியினருக்கு நீங்கள் ஞாபகப்படுத்துங்கள்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தின் முழு விவரம் வருமாறு :- வணக்கம், நான் கடந்த பல நாள்களாக தங்களிடம் பல விடயங்கள் சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஒன்றுக்கேனும் பதில் தரவில்லை.
இருப்பினும் கடந்த 28.03.2015 ஆம் திகதி திருகோணமலையில் நடந்த கருத்தரங்கில் கூட்டமைப்பு பதிவு சம்பந்தமாக நீங்கள் கூறிய கருத்துக்களில் ஏதோ தமிழரசுக் கட்சிதான் நீண்டகால போராட்டங்களை முன்னெடுத்தது என்றும் அவர்களின் சம்மதம் இதில் முக்கியம் என்றும் கருத்துக் கூறியிருந்தீர்கள்.
போராட்ட வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற எல்லா கட்சிகளும் போராட்ட வடிவங்களை மாற்றிக் கொண்டு தமிழரசுக் கட்சியை விட மிகத் தீவிரமாகப் போராடியுள்ளன. அதுமட்டுமல்ல, தமிழரசுக் கட்சியை விட ஏனைய கட்சிகள் அதிகளவான உயிரிழப்புக்களை சந்தித்ததோடு மட்டுமல்லாமல் விலைமதிக்கமுடியாத தங்களது தலைவர்களையும் இழந்துள்ளன.
ஏற்கனவே தமிழ் மக்களின் பிரச்சினையை தமிழரசுக் கட்சியால் தீர்க்கமுடியாது என தீர்க்கதரிசனத்தால் உணர்ந்துகொண்டபடியால்தான் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் அனைத்தையும் முடக்கிவைத்துவிட்டு தந்தைசெல்வா அவர்கள் 1972ஆம் ஆண்டு அப்போதிருந்த முக்கிய தமிழ்த் தலைவர்களான சட்டமாமேதை அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம், மலையகத் தமிழர்களின் விடிவெள்ளி அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோரை இணைத்துக் கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார்.
அந்த வரலாறு தங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை ஏனெனில் அப்போது தாங்கள் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தும் தமிழரசுக் கட்சியில் எந்த ஒரு முக்கிய பதவியிலும் இருக்கவுமில்லை தமிழரசுக் கட்சியின் எந்தவொரு போராட்டத்திலும் கலந்துகொண்டதுமில்லை. இருந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி உதயமான பின்னர்தான் தாங்கள் ஒரு பிரபல்யமான சட்டத்தரணி என்ற காரணத்தினால் தந்தைசெல்வா அவர்கள் உங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைத்துக் கொண்டுசெயற்பட்டார். 1977ஆம் ஆண்டு தாங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டு முதன்முதலாக நாடாளுமன்றம் சென்றீர்கள் என்பதைக் கூட மறந்துவிட்டீர்களே.
தந்தை செல்வாவின் மறைவுக்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதான எதிர் கட்சியானதும் அதில் தாங்களும் அங்கம் வகித்தீர்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியின் போராட்டங்கள், அதன் தலைவர்களின் தலைமறைவு வாழ்க்கைகள், தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேச அரங்குக்கு எடுத்துசென்ற முறைகள் எல்லாவற்றையும் எப்படி மறந்தீர்கள்? பெறுமதிமிக்க எத்தனை பெருந்தலைவர்களை எல்லாம் துப்பாக்கி குண்டுகளுக்கும் தற்கொலைத் தாக்குதல்களுக்கும் பலி கொடுத்துள்ளோம். அப்பாவித் தொண்டர்கள் எத்தனை பேரை துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகக் கொடுத்தோம் இவைகளை எல்லாம் நன்கு தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் தமிழரசுக் கட்சிதான் பல போராட்டங்களை நடத்தியது என்று எவ்வாறு கூற முடிந்தது? தமிழர் விடுதலைக் கூட்டணியோடு ஒப்பிடும்போது போராட்டங்களானாலும் சரி, இழப்புகளானாலும் சரி தமிழரசுக் கட்சியின் பங்கு மிகச் சிறியதே.