ஐ.எஸ் தீவிரவாதிகளால் மீண்டும் கற்பழிக்கப்படுவோம் என அஞ்சி, 17 வயதான யாஸிதி சிறுமி ஒருவர் தன்னையே எரித்துக் கொண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாஸ்மின் என்ற சிறுமியே இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். தற்போது ஜேர்மனியில் டாக்டர் Jan Ilhan Kizilhan நடத்தி வரும் மையத்தில் உளவியல் சிகிச்சை பெற்று வருகிறார் யாஸ்மின்.
யாஸ்மின் வாழ்க்கையில் நடந்த கொடுமைகளை டாக்டர் Jan Ilhan Kizilhan தற்போது உலக மக்களுடன் பகிர்ந்துள்ளார்.
யாஸிதி என்ற சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் யாஸ்மின். இவர் கடந்த 2014ம் ஆண்டு ஈராக்கின் வடக்கு பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்படவர்களில் ஒருவர்.
ஐ.எஸ் பிடியில் பாலியல் அடிமையாக தனது வாழ்க்கையின் மிக மோசமான நாட்களை கடந்த யாஸ்மின், அங்கிருந்து தப்பித்து ஈராக்கில் உள்ள அகதிகள் முகாமில் பாதுகாப்பாக இருந்துள்ளார்.
அப்போது, முகாமிற்கு வெளியே ஐ.எஸ் தீவிரவாதிகள் குரல் கேட்பதாக கருதி, எங்கே மீண்டும் கற்பழிக்கப்படுவோம் என அஞ்சி தன்னையே எரித்து கொண்டுள்ளார்.
இதில் அவரது உடல் முழுவதும் தீக்கிரையாகியுள்ளது. முகாமில் டாக்டர் Kizilhan சிகிச்சை அளித்த யாஸ்மின் உயிரை காப்பற்றியுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்ட யாஸ்மினை ஜேர்மனியில் உள்ள அவரின் மையத்திற்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து வருகிறார். தனக்கு நடந்த கொடுமைகளை யாஸ்மின் டாக்டருடன் பகிர்ந்துள்ளார்.
டாக்டர் Kizilhan மையத்தில் இதுபோன்று பாதிக்கப்பட்ட 1100 பெண்கள் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நலமாக குடும்பத்துடன் ஜேர்மனியில் வசித்து வரும் யாஸ்மின் மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க விரும்புவதாக டாக்டர் தெரிவித்துள்ளார்.