எப்போதோ பல மாதங்களுக்கு முன்னர், தன்னைத்தானே வீடியோ எடுத்துக்கொண்டார் ஈழத்து நடிகை திவ்யா. ‘செல்ஃபி’ எடுப்பது போல, வெகு இயல்பானது அது. ஒருவர் தன்னைத்தானே விதம் விதமாக போட்டோ எடுப்பதற்கும், வீடியோ எடுப்பதற்கும் அவருக்கு சகல உரிமையும் உண்டு. சொல்லப்போனால், படுக்கை அறைக்குள், குளியல் அறைக்குள் கமெராவை ரகசியமாக பொருத்தும் ‘பொறுக்கிகளை’ விட, பார்க்கில் முத்தமிடும் காதலர்களை ‘ஒளித்து நின்று’ படம்பிடிக்கும் ‘துப்புக் கெட்டவர்களை விட’ திவ்யா செய்தது ஒன்றும் பெரிய குற்றமே இல்லை.
இந்த வீடியோவை கடந்தவாரம் ‘தினேஷ் திவ்யா’ என்ற ‘ஃபேக் ஐடி’ ஃபேஸ்புக்கிலே பதிவேற்றம் செய்திருந்தது. இதன் மூலம் தான் திவ்யாவை பழிவாங்குவதாக அது அறிவித்தது. அந்த இரவு முழுவதும் எமது கலையுலக நண்பர்கள் ஒன்றுசேர்ந்து அந்த ஃபேக் ஐடியை ரிப்போர்ட் செய்தோம். காலையில் அந்த ஐடி காணாமல் போயிருந்தது. விஷயம் அப்படியே முடிந்துவிட்டது என்று நினைத்திருக்க, அந்த வீடியோ எப்படியோ நமது ‘கொப்பி பேஸ்ட்’ இணையக்காரர்களுக்குச் சென்றுவிட்டது.
இந்த இணையக்காரர்கள் பற்றித்தான் நமக்குத் தெரியுமே..! அவர்களுக்கு சொந்த புத்தி கிடையாது. சொந்த சிந்தனை கிடையாது. சொந்தக் கருத்தும் கிடையாது. ‘கொப்பி பேஸ்ட்’ செய்வது மாத்திரமே அவர்களுக்குத் தெரிந்த ஒரே ஒரு கலை. மன்னிக்கவும், அவர்களுக்கு ‘கேவலமாக’ தலைப்பு வைக்கவும் தெரியும். (இது எல்லா இணையங்களையும் குறிக்காது என்பதையும் பதிவு செய்கிறேன்.)
பிறகு, சிலிர்த்து எழுந்த நம் ‘கொப்பி பேஸ்ட்’ இணையக்காரர்கள், அந்த வீடியோ குறித்து எடுத்த சகல வாந்திகளையும் நீங்கள் அறிவீர்கள். இந்தச் செய்திகளை எல்லாம் பார்த்து, திவ்யா தூக்கில் தொங்கினாலோ, விஷம் குடித்தாலோ, தமது ‘வெறி அடங்கிவிடும்’ என்று அவர்கள் கணக்குப் போட்டார்கள். ஆனால் நடந்ததோ வேறு…!
இன்று பிற்பகல், திவ்யா வீடியோ மூலம் மக்கள் முன் தோன்றினார். ‘ஆம் அந்த வீடியோவில் தோன்றியது நான் தான். அந்த தவறுக்காக வருந்துகிறேன்’ என்று வெகு இயல்பாக பேசினார். அவரின் நெற்றியிலே குங்குமம் இருந்தது. ஒரு சுற்று குண்டாக இருந்தார். முன்னைய வீடியோ பழைய வீடியோ என்பதற்கு இன்றைய அவரின் தோற்றமே சான்று.
இவ்வளவு தைரியமாக அவர் வந்து பேசியது, நமது ‘கொப்பி பேஸ்ட்’ காரர்களுக்கு ‘சாணியில் தோய்த்த செருப்பால் முகத்தில் அடித்தது’ போலாகிவிட்டது. இருக்காதா பின்ன?
இப்படியான செய்திகள் வந்தவுடன், அவமானம் தாங்காமல் ஒரு பெண் தற்கொலை செய்ய வேண்டும் என்பதுதானே எமது ’புனிதமான’ சமூக வழக்கம். அதை மீறி மீண்டும் வீடியோவில் தோன்றுவதை எப்படி இவர்களால் சகிக்க முடியும்? அதனால் மேலும் கடும்கோபம் கொண்டு, இன்று மாலையளவில் ‘ஒட்டுமொத்த ஈழக்கலைஞர்களையும்’ அவமானப்படுத்துவது போல, செய்திகளையும் படங்களையும் போட்டு, தம் வெறித்தனத்தைக் காட்டியுள்ளார்கள்.
எப்படியாவது இன்று இரவிரவாக யோசித்து யோசித்து, நாளை காலை புது தலைப்புடன், புதுக் கதையுடன் இவர்கள் மீண்டும் வருவார்கள். பின்ன, அவர்களின் ‘இறுமாப்பில்’ நீங்கள் ஆணி அறைந்தால் சும்மா இருப்பார்களா?
சரி, கலைஞர்கள் இனி என்ன செய்ய வேண்டும்?
எதுக்குமே கலங்காதீர்கள்..! எதையுமே யோசிக்காதீர்கள். சம்மந்தப்பட்ட திவ்யாவுக்கே அவ்வளவு துணிச்சலும் தன்னம்பிக்கையும் இருக்கும்போது, நீங்கள் ஏன் வருந்த வேண்டும்? வழக்கம் போல கமெராக்களை கையில் எடுங்கள். படப்பிடிப்புக்களை மீண்டும் தொடங்குங்கள்.
நாளை முதல் நீங்கள் படப்பிடிப்பில் ஈடுபட்டால், இந்த ‘கொப்பி பேஸ்ட்’ கொம்பனிக்கு ‘ஹார்ட் அட்டாக்’ வரும். ‘ச்சே நாங்கள் இவ்வளவு மாஞ்சு மாஞ்சு எழுதியும் இவர்கள் அடங்குகிறார்கள் இல்லையே’ என்று சலித்துக் கொள்வார்கள்.
கலைஞர்களே, சில விஷயங்களை நினைவில் வைத்திருங்கள். இந்த ‘கொப்பி பேஸ்ட்’ கொம்பனிக்காரர்களுக்கு கற்பனைவளம் வெகு மந்தம். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ‘கள்ளக் காதல்’ ‘விபச்சாரம்’ ‘மாமியின் முதுகை தடவிய மருமகன்’ இப்படியான சில சொற்களும், வசனங்களும் மாத்திரமே. இவற்றை வைத்துக்கொண்டுதான் இவர்கள் இணையம் நடத்துகிறார்கள். செய்தி தட்டுப்பாடு வரும்போது, தமக்கு கைவந்த கலையாகி ‘கொப்பி பேஸ்டை’ செய்கிறார்கள்.
உலகில் மிகப்பெரிய தண்டனை ‘புறக்கணிப்பு’ – முதலில் இந்த கொப்பி பேஸ்ட் கும்பல்களை புறக்கணியுங்கள். இரண்டு நாட்கள் கத்திவிட்டு, பின்னர் அவர்கள் ‘செய்தி வறுமையில்’ வாடுவார்கள்.