தமிழரசுக்கட்சிக்கும் சம்பந்தன் ஐயாவுக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பானது பதிவுசெய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்- சிவசக்தி ஆனந்தன்

315

 

சர்வதேச விசாரணை கோரியே தமிழ் மக்கள் வாக்களித்தனர். சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என எம்மில் சிலர் மக்களை குழப்புகிறார்கள். இது மனவேதனையைத் தருகிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

IMG_0129-a

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் – கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு எமது நன்றிகள். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான எமது கட்சியின் வடமாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருடாந்த நிதி நான்கு கோடியே நாற்பது லட்சம் ரூபா மக்களுடைய தேவைகளை நிறைவேற்றித் தருவதற்கு பயன்படுத்தப்படும். கடந்த 30 வருடகாலத்தில் ஏற்பட்டிருக்கின்ற சொத்தழிவுகள், உயிரழிவுகள், காணாமல்போனோர் விவகாரம், நீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விவகாரம், மீள்குடியேற்றம், இராணுவம் அபகரித்துள்ள காணி விவகாரம் போன்ற வடயங்கள் இந்த ஐந்து வருட காலத்தில் மிகுந்த சவால் நிறைந்த பணியாக இருக்க போகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணியும் இணைந்து ஒரு தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்திருக்கின்றார்கள். ஆகவே இந்த தேசிய அரசாங்கம் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான ஒரு காத்திரமான பணியை முன்னெடுக்கும் என நம்புவதாக தெரிவித்தார். எமது அன்றாடப் பிரச்சினைகளிலிருந்து நிரந்தர தீர்வை, நிரந்தரமான அபிவிருத்தியை காண்பதற்காக இன்னும் நாங்கள் மிகக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கின்றது.

நாங்கள் ஒன்று சேர்ந்து உழைக்கின்ற போது நாங்கள் அந்த இலக்கை அடைய முடியும். இறுதி யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை கோரியே தமிழ் மக்கள் எங்களுக்க வாக்களித்திருந்தார்கள். ஆனால் எங்களில் இருக்கக்கூடிய ஒரு சிலர் கூறுகிறார்கள் சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற்று முடிந்தவிட்டது. மீண்டும் என்ன ஒரு சர்வதேச விசாரணை என மக்களை குழப்புகிறார்கள்.

எம்மில் சிலர் இப்படியான கருத்துக்களை தெரிவிப்பது எமக்கு மன வேதனையளிக்கிறது என தெரிவித்தார். தமிழ் மக்களை கொலை செய்தவர்களே விசாரணை செய்தால் எமக்கு நீதி கிடைக்காது. மஹிந்த ராஜபக்‌ஷ காலத்திலே ஓர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அந்த ஆணைக் குழுவின் அறிக்கைகள் எல்லாம் கிடப்பிலே போடப்பட்டுள்ளது எந்த நீதியும் வழங்கப்படவில்லை. கடந்த 60 வருட காலத்தில் தமிழ் மக்களுக்கு இளைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்படவில்லையென்பதை அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளோம்.

யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் பல தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை கணவன்மார்களை தேடித் திரிகிறார்கள் இவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு சர்வதேச விசாரணை தேவை என வலியுறுத்தவேண்டும். தமிழ்தேசிய கூட்டமைப்பானது பலமான கட்சியாக மாற்றம்பெற பதிவுசெய்யப்பட வேண்டும். அதற்காக குரல் கொடுக்க வேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா தலைமையில் இன்றைக்கு 15 வருடங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஒரு யாப்பு இல்லை.

எந்தவிதமான பலமான ஒரு கட்டமைப்பும் இல்லை. கூட்டமைப்பின் பேரால் ஒரு கட்சி தன் நலன்சார்ந்து செயல்படுவது தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் மனக்கசப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே பொதுமக்கள் தமிழரசுக்கட்சிக்கும் சம்பந்தன் ஐயாவுக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பானது பதிவுசெய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.

SHARE