தமிழில் தேசியகீதம்! முன்னோக்கிய பயணத்திற்கான அரசின் முதல் காலடி!

253

கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த 4ம் திகதி கொண்டாடப்பட்ட நாட்டின் 68வது தேசிய சுதந்திர தின விழாவில் தேசிய கீதம், சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் பாடப்பட்டமையானது தமிழ் பேசும் மக்களை பெரிதும் கவர்ந்த ஒன்றாக விளங்கியது. அது மாத்திரமன்றி, சர்வதேச ரீதியிலும் அது மிகுந்த கவனத்தை ஈர்த்தது என்றும் கூறலாம்.

பொதுவாக கடந்த அரசின் காலத்தில் விசேடமாக வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் தமிழில் தேசிய கீதம் பாடுவது ஒருவித குற்றச்செயலை போன்றே பார்க்கப்பட்டது. அது மாத்திரமன்றி அதனை தடைசெய்ய வேண்டுமென சிங்கள அடிப்படைவாதிகள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அந்தவகையில், நல்லாட்சி அரசு பதவியேற்ற பின்னரும் கூட இந்த சர்ச்சை தொடர்ந்து நீடித்தது.

சுதந்திரதின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படும் என்ற செய்தி கசிந்தவுடன், அதற்கு எதிராக முன்னைய அரசின் முக்கியஸ்தர்கள் இனவாதக் கருத்துக்களை பரப்பி வந்தது மாத்திரமன்றி, அதற்கு கடுமையான கண்டனத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இதுபற்றிக் கூறுகையில்,

இலங்கையில் அரச நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதம் பாட வேண்டிய அவசியமில்லை. சிங்களத்தை இன்று தமிழில் இயற்றக் கேட்பார்கள். இன்னும் சிலர், நாளை உருது மொழியிலோ அல்லது அரேபிய மொழியிலோ தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என போராட்டங்களில் ஈடுபடுவார்கள். எனவே இது அநாவசியமானதொன்று எனக் கூறியிருந்தார்.

இவ்வாறான சூழ்நிலையில் சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுமாயின் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணையொன்று கொண்டு வரப்படும் எனவும் அரசியலமைப்பின் 7வது மற்றும் 83வது பிரிவின் கீழ் இது சாத்தியமெனவும் உதய கம்மன்பில எச்சரித்திருந்தார்.

உலகின் பல்வேறு நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேசிய கீதம் பாடப்பட்டு வருவது குறித்து சுட்டிக்காட்டப்பட்ட போதும், அது முன்னைய ஆட்சியாளர்களின் செவிகளில் உரைக்கவில்லை. அவற்றுக்குப் புதிய நியாயங்களை கற்பிப்பதிலேயே அவர்கள் ஈடுபட்டனர்.

இலங்கையை பொறுத்தமட்டில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது இது முதற்தடவையல்ல. 1949ம் ஆண்டு சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடப்பட்ட தேசிய சுதந்திர தின விழாவில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.

அவ்வேளை, தேசிய சுதந்திர தின நிகழ்வுக்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் கூட தமிழில் தேசிய கீதம் பாடப்படுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

1951ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதியே “நமோ நமோ மாதா” இலங்கையின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது. இப்பாடலை ஆனந்த சமரகோன் அவர்கள் எழுதி அதற்கான இசையையும் அமைத்திருந்தார்.

அதேவேளை, அப்போதைய பிரதமராக இருந்த அமரர் டி.எஸ்.சேனாநாயக்காவின் பணிப்பின் பேரில் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

தமிழ்மொழிப் புலவர் மு. நல்லதம்பி இப்பாடலை பொருள் மாறுபடாமல் தமிழில் மொழிபெயர்த்தார். அதனைத் தொடர்ந்து தேசிய கீதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பானது தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் பாடப்பட்டு வந்தது.

எனினும், பின்னரான காலப்பகுதியில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது முற்றாகக் கைவிடப்பட்டதுடன் இனவாதத்தின் அடிப்படையிலேயே அது நோக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அதுமாத்திரமன்றி, கடந்த சில காலமாக பொது நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக, தமிழ் பாடசாலைகளில் கூட சிங்கள மொழியிலேயே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதனால் சில பாடசாலை அதிபர்கள், அரச அலுவலக அதிகாரிகள் செய்வதறியாது தடுமாறினார்கள்.

இவ்வாறான பின்னணியில் நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், தமிழிலும் தேசிய கீதம் பாடப்படுவது அவசியமென்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

குறிப்பாக, 2009 ஆம் ஆண்டுடன் யுத்தம் முடிவுக்கு வந்த போதிலும் இனங்களுக்கிடையே நல்லிணக்கதை ஏற்படுத்துவதில் அரசாங்கம் காத்திரமான பங்களிப்பு எதனையும் செய்யவில்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

உண்மையில் நாட்டில் மூன்று தசாப்தகாலமாக யுத்தம் நீடித்தமைக்கு பிரதான காரணம் மொழி ரீதியான பிரச்சினை என்பதை எவரும் சரியாக கணக்கில் கொள்ளவில்லை.

முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சிங்கள மொழியை மாத்திரம் உத்தியோகபூர்வ மொழியாக அறிவித்ததை தொடர்ந்து தமிழ் பேசும் மக்கள், தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்ததுடன் தமிழ், சிங்கள மக்களுக்கிடையேயான நல்லுறவு சிதைவுற்றது.

அடுத்தடுத்து இனக்கலவரங்கள் மேலோங்கியதுடன் பெரும்பான்மை மக்களை கொண்ட சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் பேசும் மக்களை அடக்கியொடுக்கி நசுக்கும் முயற்சிகளிலேயே ஈடுபட்டும் வந்தனர். இதனால் இரு இனங்களும் துருவப்படுத்தப்பட்டன.

இந்த நாட்டின் சுதந்திரத்துக்கு சிங்களத் தலைவர்கள் மாத்திரமன்றி தமிழ், முஸ்லிம் தலைவர்களும் அயராது பாடுபட்டனர்.

அவர்களில் டி.எஸ்.சேனநாயக்க, சேர் ஜேம்ஸ் பீரிஸ், அநகாரிக தர்மபால, சேர் பொன்னம்பலம் அருணாசலம், சேர் பொன்னம்பலம் இராமநாதன், டி.பி. ஜாயா, எம்.சி.சித்திலெப்பை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அதனை அன்றைய சிங்களத் தலைவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.

அந்தவகையில் தமிழ் பேசும் மக்களும் பெரும்பான்மை சிங்கள மக்களை போன்று சமவுரிமை கொண்டவர்களாக மதிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டும் இருந்தனர்.

ஆனால், அதனை தொடர்ந்து வந்த காலப்பகுதி இந்த நிலைமையை முற்றாக மாற்றியமைத்தது மாத்திரமன்றி, இரு இனங்களுக்குமிடையில் கடும் பகையையும் மூட்டிவிட்டது.

இதன் காரணமாகவே கடந்த மூன்று தசாப்த காலமாக நாடு தீப்பற்றி எரிந்தது என்பதை இந்த நாட்டின் கடும்போக்காளர்கள் மறந்துபோகக்கூடாது.

எவ்வாறெனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் துணிச்சலான நடவடிக்கையின் பயனாக தமிழிலும் தேசியகீதம் பாடப்பபட்டிருப்பது மிகவும் வரவேற்கக்கூடியதொன்றாகும்.

கடுமையான எதிர்ப்புக்களையும் புறக்கணித்து அவர் இந்த முடிவை மேற்கொண்டுள்ளார். உண்மையில் தேசிய கீதம் என்பது அந்த நாட்டின் வளங்களையும் மேம்பாட்டையும் போற்றும் ஒன்றாகும். அதனை ஒருவர் தனது தாய்மொழியில் உணர்ந்து பாடும்போதே உண்மையான நாட்டுபற்றை அவரால் உணரக்கூடியதாகவிருக்கும்.

மாறாக, விளங்காத ஒன்றுக்கு பிறிதொரு மொழியில் வாயசைப்பது எந்தவகையிலும் உள்ளார்ந்த உணர்வை வெளிப்படுத்தும் ஒன்றாக அமையாது. தமிழிலும் தேசிய கீதம் பாடப்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே அந்த குறித்த மொழியை பிரதிநிதித்துவபடுத்தும் இனங்களுக்கு தாங்கள் அந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற உணர்வு மேலோங்குவதுடன் நாட்டுப்பற்றும் அதிகரிக்கும்.

இவற்றை உணர்ந்த வகையிலேயே குறிப்பாக தென்னாபிரிக்காவில் தேசிய கீதம் ஐந்து மொழிகளிலும் கனடாவில் தேசியகீதம் ஆங்கிலத்திலும் பிரஞ்சு மொழியிலும், சுவிற்சர்லாந்து, நியுசிலாந்து போன்ற நாடுகளில் பயன்பாட்டிலுள்ள பல மொழிகளிலும் தேசியகீதம் பாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு வகையில் இது ‘காலம் கடந்த ஞானமாக’ இருப்பினும் தேசிய கீதம் கடந்த வியாழனன்று நடைபெற்ற நாட்டின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழில் பாடப்பட்டமை வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது மாத்திரமன்றி, சர்வதேச அரங்கில் அரசுக்கு நற்பெயரை தேடிக்கொடுக்கும் விடயமாகவும் அமைந்துள்ளது.

மேலும், இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஆரம்பப்படியாக இதனை கொள்ளமுடியும்.

அந்தவகையில் இந்த நல்லாட்சி அரசின் முன்னோக்கிய பயணத்திற்கான முதல் காலடியாக இதனை கொள்ளலாம் எ–ன்பதே அனைவரதும் நம்பிக்கை.

SHARE