தமிழில் தேசிய கீதம் இசைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மகிந்த அணி உறுப்பினர் போராட்டம்

263
இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகிந்த அணி சிங்கள அரசியல் வாதியொருவர் ஹற்றன், கினிகத்தேனை நகரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான எலபிரிய நந்தராஜ் என்பவரே கினிகத்தேன பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள மலசலகூடமொன்றின் மீதேறியே இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

நல்லாட்சிக்காரர்கள் நாட்டின் சட்டத்தை மீறி தமிழிழ் தேசிய கீதம் பாடியுள்ளனர் என்று கோஷமெழுப்பிய இந்த அரசியல் வாதி, பொது எதிரணி என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் மஹிந்த ஆதரவு அணியின் அங்கத்தவராகவும் செயற்பட்டு வருகிறார்.

நல்லாட்சி அரசில் சிங்களவர்களுக்கு எதிராக நயவஞ்சக அணுகுமுறை கடைபிடிக்கப்படுகின்றது. தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்கப்பட்டதற்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கைக்கு 1948ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. முதலாவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. எனினும், அதன் பின்னர் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்பட்டு வருகிறது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் நல்லிணக்கத்துக்கு சிறந்ததொரு சமிக்ஞையை விடுக்கும் வகையில் தமிழ் மொழியில் தேசியகீதம் இம்முறை இசைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அரசியல் வாதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

SHARE