தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையில் கொழும்பில் நேற்று அவசர சந்திப்பு

663

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையில் கொழும்பில் நேற்று அவசர சந்திப்பொன்று நடைபெற்றது. கொழும்பு பம்பலப்பிட்டி, இசிப்பத்தான வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி முக்கியஸ்தரும் பிரபல சட்டத்தரணியுமான கனகீஸ்வரனின்வீட்டில் மாலை 4.30 மணி தொடக்கம் இரவு 7.30 மணிவரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

181108897

கடந்த பல மாதங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் வடக்கு முதல்வருக்கும் இடையில் முரண்பாடுகள் உச்சக்கட்டம் அடைந்திருந்த நிலையில், இருவருக்கும் இடையில் சந்திப்பொன்று கட்சியின் முக்கியஸ்தர்களினால் வலியுறுத்தப்பட்டு வந்தது. எனினும், பல காரணங்களினால் சந்திப்பு நடைபெறாமல் இருந்து வந்தது. இந்தநிலையில், கடந்த வாரம் வடக்கு முதலவர் விக்னேஸ்வரனின் இணைத்தலைமையில் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்கப்பட்டமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மத்தியில் கடும் அதிர்ச்சியை தோற்றுவித்திருந்த நிலையில் நேற்று இந்த அவசர சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனோடு பேச வேண்டிய சகல விடயங்கள் தொடர்பாகவும் நான் பேசிவிட்டேன். தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விவகாரங்களில் கூட்டமைப்பின் கொள்கை – கோட்பாடுகளுக்கைமைய ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பணியாற்றுவது தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் இருவரும் பேசினோம். எமது பேச்சுகள் தொடரும்” – என்றார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில், “நாங்கள் பல விடயங்களை சுமூகமாகப் பேசிக் கொண்டோம். கூடிய விரைவில் மேலும் பல விடயங்கள் சம்பந்தமாக பேசிக் கொள்வோம். மக்களின் நன்மைதான் எங்கள் இருவருக்கும் முக்கியமானது. ஆகவே அது சம்பந்தமாக தொடர்ந்து இருவரும் பேசிக்கொள்ள வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. விரைவில் சட்டத்தரணி கனகீஸ்வரன் தலைமையில் இன்னுமொரு பேச்சு நடைபெறும்”

SHARE