பல வருட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையிலும் அவையணைத்தும் நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும் நிலைப்பாடே உருவாகியிருக்கின்றது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஹூசைன் அவர்கள் தெரிவித்த கருத்தின்படி, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சர்வதேச நாடுகள் எதுவித தீர்மானங்களையும் மேற்கொள்ள முடியாது எனவும் இதனை இலங்கை அரசுடன் தான் பேசித்தீர்க்கவேண்டும் என அவர் தெரிவித்த கருத்தானது தமிழ் அரசியல் கைதிகளின் மத்தியில் குழப்பத்தினையும், தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினையும் தோற்றுவித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளாக இன்னும் குறைந்த பட்சமானவர்களே சிறைகளில் உள்ளனர். ஜனாதிபதியவர்களுடைய இறுதி தீர்மானமே இவ்வரசியல் கைதிகளின் விடுதலைக்கு சாதகமான வழிவகைகளை ஏற்படுத்தும் என்கின்ற காரணத்தால் அவரை அணுகி அதற்கான முன்னெடுப்புக்களை நாம் மேற்கொள்ளவுள்ளதாகவும், இதனைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 23ம் திகதி த.தே.கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கவுள்ளதாகவும் தமிழரசுக்கட்சியின் தலைவரான மாவைசேனாதிராஜா அவர்கள் எமது செய்திப்பிரிவுக்குத் தெரிவித்தார்.