தமிழ் இலக்கிய உலகில் தமிழர்களின் பண்டைய வரலாற்றுப் பெருமைகளைத் தனது ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர்:-

349

தமிழ் இலக்கிய உலகில் தமிழர்களின் பண்டைய வரலாற்றுப் பெருமைகளைத் தனது ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் அவரது மறைவை ஒட்டி அவரது மாணவியாக எனது நினைவுகளை இங்கே பதிகின்றேன்…
இணுவையூர் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்

இலக்கணம், இலக்கியம், மொழி, பண்பாடு, வரலாறு, சமயம், தொல் எழுத்துக்கலை, கல்வெட்டியல் என்று பல துறைகளில் வல்லுனராக, தமிழ் இலக்கிய உலகில் மிகச்சிறந்த ஆளுமையாக விளங்கிய பேராசிரியர். ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் அமெரிக்காவில் உள்ள தனது இல்லத்தின் குளியலறையில் விழுந்தமையாற் தலையில் அடிபட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 1.11.15 அன்று காலமாகிவிட்டார். புpறப்பும், இறப்பும் இயற்கையின் நியதி. ஆயினும் எந்தத்துறையிலாயினும் சிறந்த ஆளுமையுள்ளவர்களை இழக்க நேரிடும்போது அதுவும் அவர்கள் சிறந்த குருவாக, தந்தையாக இருந்து எமக்கு நல்வழி காட்டியவர்களாயின் அந்த இழப்பு ஈடு  செய்ய முடியாததொன்றாகி விடுகின்றது. அந்த இழப்புத் தருகின்ற வலியும் மிக அதிகம். 1984 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்தின் தமிழ் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பேராசிரியர். ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் நியமனம் பெற்று வந்தபோது நான் தமிழைச் சிறப்புப்பாடமாகக் கற்கும் மாணவியாக மூன்று வருடங்கள் அவருடைய வழிகாட்டலில் தமிழ் மொழியின் உன்னதத்தினையும், அம்மொழியின் பிரயோகத்தினையும் சிறப்பாகக் கற்றுக்கொள்ள முடிந்தது என்னுடைய அதிஷ்டம் என்பதைப் பின்னாளில் அறிந்து கொண்டேன். அவர் விரிவுரையானாலும் ஆலோசனைகளானாலும், உரையாடல் ஆனாலும் உபயோகமற்ற வார்த்தைகளைப் பிரயோகிக்க மாட்டார். தமிழர் நாகரிகமும் பண்பாடும், சாசனமும் தமிழும் ஆகியவற்றை அவர் எமக்குக் கற்பித்தார். இக்காலத்திலேயே அவர் எழுதிய “தமிழ் இலக்கியத்திற் காலமும் கருத்தும்” “சாசனமும் தமிழும்” “தமிழ் வரலாற்று இலக்கணம்” ஆகியவற்றை எமது கற்கை நெறிக்காகப் படிக்கும் பேறும் கிட்டியது.   இறுதியாண்டில் என்னுடைய ஆய்விற்கு எடுத்துக்கொண்டது  இணுவையூர் சின்னத்தம்பிப்புலவரின் ஆக்கங்கள் அடங்கிய ஏடுகள். பேராசிரியர் அவர்களே என்னுடைய ஆய்வின் நெறியாளராக இருந்து ஏடுகளை எவ்வாறு வாசிப்பது என்பதில் இருந்து அதைச் சிறந்த ஆய்வாக எப்படி உருவாக்க வேண்டும் என்பது வரையான ஆலோசனைகளையும் தந்தவர். ஆய்வு முழமையடைந்து சமர்ப்பித்த பின் யுத்தகாலத்தின் நெருக்கடிகளுக்குள் எமது இருப்பிற்கும் உத்தரவாதம் அற்ற நிலையில் மின்சார வசதிகள் அற்ற யாழ்ப்பாணச் சூழலில் அந்த ஆய்வினை நூலாக வெளியிடுவதற்கு ஆலோசனைகளையும் தந்து என்னை உற்சாகப்படுத்தியவர். அந்த நூல் அவருடைய முன்னுரையுடனே 1988 ஆம் ஆண்டு கைலாசபதி கலையரங்கில் வெளியிடப்பட்டது.
பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்களின் தந்தையின் பெயர் ஆழ்வாப்பிளளை. 21.11.1936 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள புலோலி ஊரிற் பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியைப் புலோலி தமிழ்ப்பாடசாலையிலும், பின் புலோலி ஆங்கிலப்பாடசாலையிலும் கற்று, தனது உயர்கல்வியைக் ஹாட்லிக் கல்லூரியிற் கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார் அங்கு பி.ஏ சிறப்புக் கலைப்பட்டதாரியாக முதல்வகுப்பிற் சித்திபெற்றார். இதற்காக இவர் ஆறுமுக நாவலர் பரிசினையும், இலங்கை அரசாங்கத்தின் பல்கலைக்கழகப் புலமைப்பரிசினையும் பெற்றுக்கொண்டுள்ளார். பின்னர் பேராசிரியர். க. கணபதிப்பிள்ளை அவர்களின் நெறிப்படுத்தலிற் தமிழிற் கலாநிதிப்பட்டத்தை, மிக இளம் வயதிலே, முதன் முதலில் இலங்கையிற் பெற்றுக்கொண்டவர் இவரே என்று அவரது வரலாற்றுக்குறிப்பில் இருந்து அறிய முடிகின்றது. இதன்பின் இலண்டனில் உள்ள ஒக்ஸ்வேட் சர்வகலாசாலையில் தொமஸ் ப்ரோ என்பவரின் நெறிப்படுத்தலிற் கலாநிதிப்பட்டத்தைப் பெற்று இரண்டு கலாநிதிப்பட்டங்களைப் பெற்ற பெருமைக்குரியவரானார்.
பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1964 ஆம் ஆண்டு விரிவுரையாளராகப் பதவியேற்றுப் படிப்படியாக உயர்வு பெற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராகத் தமிழ்த்துறைத் தலைவராகக் கடமையாற்றிப் பின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இதன்பின் புலம்பெயர்ந்து சென்று சுவீடனில் உள்ள உப்சாலாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார் அப் பல்கலைக்கழகம் இவரது அறிவினையும், பணியினையும் பாராட்டிச் சிறப்புக் கலாநிதி;ப்பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளது. இதன்பின் நோர்வேயிலும், பின் அமெரிக்காவிலுள்ள இரண்டு பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளராக, பேராசிரியராக, கலாநிதிப்பட்ட நெறியாளராக, கலாநிதிப்பட்ட மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்துள்ளார். இவர் பல ஆய்வு நூல்களையும் ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். ஈழத்துத் தமிழறிஞர் ஒருவரை, அவரது ஆழ்ந்த புலமையினை, உயரிய பண்பை, இலண்டன், சுவீடன், நோர்வே, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்கள் இனங்கண்டு கொண்டது மட்டுமன்றி அவரது அறிவை, சிந்தனையை அந்த நாட்டு இளம் தலைமுறையினருக்குப் பெற்றுக்கொடுப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டுள்ளனர் எமது ஈழத்தமிழர்களின் இளந்தலைமுறையினருக்கு இத்தகைய ஒரு தமிழறிஞரின் வழிகாட்டலும், கற்பித்தலும் கிடைக்காமற் போனது பெரும் துரதிஷ்டமே.
எனது பல்கலைக்கழக வாழ்க்கையில் நான்கண்ட மிக நேர்மையான, ஆழ்ந்த புலமையுள்ள மிகச்கிறந்த பேராசிரியர். நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் உதவி விரிவுரையாளராகக் எனது இருபத்தி மூன்றாவது வயதிற் கடமையேற்ற போது அவரது உயரிய பண்பு கண்டு நானும் அவரைப் போல சிறு வயதிலேயே நிறையச் சாதிக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் எனது துரதிஷ்டம் பல்கலைக்கழகச் சூழல் அதற்கு ஏற்றதாக எனக்கு அமையவில்லை. ஆயினும் இன்று பேராசிரியரின் இழப்பைக் கேழ்வியுற்று பழைய நினைவுகளில் மூழ்கிய போது ஒரு நல்ல குரு என்பவர் அறியாமை இருளைப்போக்கி அறிவுக்கண்களைத் திறப்பவர். என்பது முற்றிலும் உண்மை என்பது நன்றாக உறைக்கின்றது.

இணுவையூர் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்.
0000000000000000000000000000000000000000000000000000

முதலாம் இணைப்பு – ஈழத் தமிழ் பேராசிரியர் வேலுப்பிள்ளை காலமானார்:-

தமிழ் இலக்கிய உலகில் மிகச்சிறந்த ஆளுமையாக கருதப்பட்ட ஈழத்துப் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை இன்று காலமானார்.

இரண்டு கலாநிதிப் பட்டங்களைப் பெற்ற இவர்  உலகப் புகழ்பெற்ற பர்ரோ முதலான பேராசிரியர்களிடம் பயின்ற பட்டறிவுடையவர். ஆசர் உள்ளிட்டவருடன் பழகியவர்.

இளம் வயதிலேயே பேரறிவு பெற்று விளங்கிய பேராசிரியர் ஆழமான அறிவுப் படைப்பால் என்றும் போற்றி மதிக்கக்கூடியவராக விளங்குபவர்.

இவர் தமிழ், தமிழக வரலாறு, புத்த, சமண சமயத்துறைகளில் ஆற்றல் பெற்ற ஆய்வாளர். இவரின் நெறியாளர் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை.

தமிழ், சாசனவியல், திராவிட மொழியியல் , இலக்கியமும் வரலாறும் ஆகிய துறைகளில் மிகவும் புலமை கொண்டவர்.

ஈழத்தில் வடக்கில் தென்புலோலியூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் வேலுப்பிள்ளை ஆரம்ப கல்வியை தனது ஊர்ப்பாடசாலையில் நிறைவுசெய்தார்.

1955-1959 காலப் பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இனமானிப் பட்டம் பெற்ற இவர் அப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்ததுடன் யாழ் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார்.

அமெரிக்காவில்  அரிசோனா பல்கலைக்கழகத்தில் சமயவியல்துறையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டதுடன் 1973-1974 இல் திருவனந்தபுர திராவிடமொழியியற் பள்ளியில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்தார்.

அத்துடன் கேரளப்பல்கைலக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்ததுடன் 1980 இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலைப் பேராசிரியராகப் பணியாற்றிய சிறப்பும் கொண்டவர்.

1981-1982 இல் பொதுநல நாடுகள் கழகத்தில் நிதியுதவி பெற்று இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் உலகப் புகழ்பெற்ற பேராசிரியர் ஆசர் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

இதேவேளை 1990-2000 காலப் பகுதியில் சுவீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்த இவர் 1959-1962 இல் கலாநிதிப் பட்ட ஆய்வை மேற்கொண்டு தமிழில் முதன்முதலில் அப் பட்டத்தை பெற்றவராவர்.

பாண்டியர் காலக் கல்வெட்டுகளில்  தமிழ்மொழிநிலை என்ற பொருளில் ஆய்வு செய்ததுடன் இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 1962-1964 இல் பேராசிரியர் பர்ரோ அவர்களின் மேற்பார்வையில் ஆய்வு மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றிருந்தார்.

கல்வெட்டுகளில் தமிழ்மொழியின் நிலை (கி.பி.800 – 920) என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தியதுடன் இவரது கல்வெட்டு ஆய்வுகள் தமிழகக் கல்வெட்டுகளைப் பற்றியும், இலங்கைக் கல்வெட்டுகள் பற்றியும் பல தகவல்களைத் தருகின்றன.

பின்னாளில் இவரது ஆய்வேட்டுச் செய்திகள் நூல்வடிவம் பெற்றபொழுது தமிழுலகம் இவரது ஆராய்ச்சி வன்மையை ஏற்றுப் போற்றியது. 31.05.1996 இல் சுவீடனில் உள்ள உப்சாலாப் பல்கலைக்கழகமும் இவரது பேரறிவுகண்டு இவருக்குச் சிறப்பு கலாநிதிப் பட்டம் வழங்கிப் பாராட்டியது.

இவர் எழுதிய நூல்கள்

01. இலக்கணக் கொள்கைக் கட்டுரைகளிலே கணேசையரின் அணுகுமுறை
02. ஈழத்து அறிஞர் ஆளுமைகள்
03. கல்வெட்டுச் சான்றும் தமிழாய்வும் (ஆங்கிலத்தில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது)
04. கல்வெட்டில் தமிழ்க் கிளைமொழியியல் ஆய்வு (ஆங்கிலத்தில், திராவிட மொழியியற் கழகம் வெளியிட்டது)
05. சாசனமும் தமிழும்
06. சேர் பொன். இராமநாதன் நினைவுப் பேருரை
07. தமிழிலக்கியத்தில் காலமும் கருத்தும்
08. தமிழ் வரலாற்றிலக்கிணம்
09. நினைவுப் பேருரை பேராசிரியர் வித்தியானந்தன் காட்டும்

ஈழத்துத் தமிழர்சால்புக் கோலம்
10. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
11. தமிழர் சமய வரலாறு

SHARE