தமிழ் பிரதி நிதித்துவத்தை இல்லாமல் செய்தவர் மாவை – கருணா அம்மான் துரோகி அல்ல

84
பாறுக் ஷிஹான்
தமிழ் மக்களுக்கு பல்வேறு துரோகங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செய்திருக்கின்றார்கள். ஆனால்   கருணா அம்மான் துரோகங்களை மேற்கொள்ளவில்லை. தற்போது தமிழ் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் கொடுத்த பதிலடிக்கு பயந்து தான் இந்த தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியினை தமிழரசுக் கட்சி மேற்கொண்டிருப்பார்கள் என நம்புகின்றேன். அப்படியாயின் 1994 ஆண்டு அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதி நிதித்துவத்தை இழப்பதற்கும்  அங்குள்ள தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காகவும்  யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர்  உள்ள மாவை சேனாதிராஜா  தான் காரணம். இதனை யார் சுட்டிக்காட்டுவது என்ற கேள்வியை முன்வைக்க விரும்புகின்றேன் என 2019 ஆண்டு  கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக உண்ணாவிரத போராட்ட மேற்கொண்ட கல்முனை ஐக்கிய வணிகர் சங்க நிர்வாக உறுப்பினர் கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 14 ஆவது நாளாக (7) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் பாண்டிரப்பு பகுதியில்   இரவு இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, வடக்கு பிரதேச செயலகத்தின் தீர்விற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு (2019) முன்னர் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் தூய மனதுடன் பங்குபற்றி இருந்தேன். இச்செயற்பாட்டில் நான் ஈடுபட்டது எனது சுயநலத்திற்காக அல்ல. எமது மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க கூடாது என்பதற்காக உண்ணாவிரதம் இருந்தேன்.அந்த போராட்டத்தில் சிலர் குள்ள நரி போன்று செயற்பட்டார்கள்.
அவ்வாறான குள்ளநரி கூட்டமும் தற்போது 14 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டத்தில் இருப்பதாக அறிகின்றேன். மக்களின் போராட்டமானது வெல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன். ஆனால் சிலர் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டு குளிர் காய பார்க்கின்றார்கள். தற்போது அப்போராட்டத்திற்கு வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிலர் கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கருணா அம்மான் தேர்தலில் போட்டியிட்டு இல்லாமல் செய்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர். அதாவது 2020 ஆம் ஆண்டு கருணா அம்மானிற்கு அம்பாறை மாவட்ட மக்கள் பாராளுமன்ற தேர்தலில் 31 000 க்கும் மேற்பட்ட வாக்குகளை வழங்கி இருந்தார்கள்.
இவ்வாறு கருணா அம்மானிற்கு வாக்குகளை மக்கள் அள்ளி வழங்க காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரையே சாரும். 1977 ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை மக்கள் தமிழ் அரசுக்கட்சிக்கே அதிகளவாக  வாக்களித்து வந்திருக்கின்றார்கள். ஆனால் அக்காலப் பகுதியில் மக்களிற்கு எவ்வித நன்மைகளும் தமிழரசுக் கட்சியினால் கிடைக்கவில்லை. கடந்த காலங்களில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தை தமிழரசுக்கட்சி ஒரு ஏமாற்று வேலையாகவே செயற்படுத்தி வந்தது. இது தவிர யுத்தம் நிறைவடைந்த 2009 ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை தமிழரசுக் கட்சிக்குத்தான் மக்கள் எந்த கட்சிக்கு வாக்களித்த வந்திருக்கின்றார்கள். இந்த காலப்பகுதியில் குறித்த பிரதேச செயலக பிரச்சினை காணப்பட்டது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வித நடவடிக்கையும் இப்பிரதேச செயலக விடயத்தில் மேற்கொள்ள வில்லை. 2015 ஆண்டு இதே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸூடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைத்தார்கள்.
இதில் மாகாண சபையில் இருந்து 2 அமைச்சுக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இங்கு கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தை சுட்டிக்காட்டி தீர்வு ஒன்றினை பெற்றிருக்கலாம். ஆனால் கூட்டமைப்பினர் அவ்வாறு செய்யவில்லை. இதே போன்று 2015 ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் 15 பாராளுமன்ற ஆசனத்துடன் நல்லாட்சி அரசாங்கம் என்ற வண்டி ஓடிக்கொண்டிருந்தது. இதில் ஆளுங்கட்சிக்கு வழங்கப்பட்ட கம்பெரலிய என்ற திட்டம் எதிர்கட்சி வரிசையில் இருப்பதாக கூறி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வழங்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் பல கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் இத்திட்ட நிதியை பெற்றுக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆளும் அரசாங்கத்திற்கு பல்வேறு ஒத்துழைப்பினை வழங்கினர். எனவே அக்காலப்பகுதியில் 15 ஆசனங்களை கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஏன் இப்பிரதேச செயலகத்தின் பிரச்சினைக்கு அரசாங்கத்துடன் இணைந்து தீர்வினை பெற்றுக்கொடக்கவில்லை என்ற கேள்வியை தற்போது கேட்க விரும்புகின்றேன்.
இவ்வாறு தமிழ் மக்களுக்கு பல்வேறு துரோகங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செய்திருக்கின்றார்கள். ஆனால் இங்கு கருணா அம்மான் துரோகங்களை மேற்கொள்ளவில்லை. தற்போது தமிழ் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் கொடுத்த பதிலடிக்கு பயந்து தான் இந்த தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியினை தமிழரசுக் கட்சி மேற்கொண்டிருப்பார்கள் என நம்புகின்றேன்.
எனவே  அம்பாறை மாவட்டத்தில் கருணா அம்மான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு  தமிழர் பிரதிநிதித்துவத்தை தாம் இழந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கூறுவது பொய். அப்படியாயின் 1994 ஆண்டு அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதி நிதித்துவத்தை இழப்பதற்கும் அங்குள்ள தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காகவும்  யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் உள்ள மாவை சேனாதிராஜா  தான் காரணம். இதனை யார் சுட்டிக்காட்டுவது என்ற கேள்வியை முன்வைக்க விரும்புகின்றேன் என்றார்.
SHARE