தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்பந்தமான விடயங்களை ஆராய்வதற்கு 15 பேர் கொண்ட உபகுழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் வைத்தியர் பி.லக்ஸ்மன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தமிழ் மக்கள் பேரவையின் தலைவரும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே பி.லக்ஸ்மன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை முன்வைப்பதற்கான ஒரு உப குழுவை அமைப்பதற்கான கலந்துரையாடலாக இது அமைந்திருந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் உபகுழு ஒன்று இன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், உப குழுவில் வடமாகாண முதலமைச்சர் சார்பாக இருவரும், அரசியல் கட்சிகள் சார்பாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இருவரை முன்மொழிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமூக ஆர்வலர்கள் சார்பாக ஐவர் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு, 15 பேர் கொண்ட குழு அரசியல் தீர்வு குறித்த விடயங்களை கையாள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு குறித்து விஞ்ஞான ரீதியான ஆவணத்தை முன்வைப்பதே பேரவையின் நோக்கம் எனவும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எவ்வாறானதாக இருக்க வேண்டும்? என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென்பது தொடர்பில் மக்களின் பங்களிப்புடன் குறித்த குழு பரிந்துரைகளை முன்வைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த உப குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் அரசியல் நிபுணர்கள் மட்டுமன்றி புலம்பெயர் தமிழர்களின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.