தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்த முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அரசியல் தீர்வுக்கான யோசனைகளை முன்வைக்கப் போவதாகக் கூறி ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற பெயரில் ஓர் அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்குள் உள்ள வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இரகசியமான முறையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும், கூட்டமைப்பின் அதிருப்தியாளர்களும் பெருமளவில் கலந்துகொண்டுள்ளனர். இந்த அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்துவதற்காகத் திட்டமிட்டு கூட்டமைப்பின் அதிருப்தியாளர்களின் அழுத்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அரசியல் இராஜதந்திரிகளிடமிருந்தும் மற்றும் உள்ளூர், சர்வதேச ஊடகங்களிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அதன் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிடுகையில்-
அவர் மேலும் கூறுகையில் – தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் ஒரு புதிய அமைப்பு ஜனநாயக ரீதியில் உருவாகி செயற்படுவதை எதிர்க்கமுடியாது. ஆனால், ஒரு கட்சியைச் சார்ந்தவர்கள் கட்சியின் கோட்பாடுகளை மீறி கட்சித் தலைமையின் அனுமதியைப் பெறாமல் தனிப்பட்ட ரீதியில் ஒரு புதிய அமைப்பை உருவாக்குவதை கட்சித் தலைமை ஏற்றுக்கொள்ளாது. அதேமாதிரித்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கட்சித் தலைமைக்கு அறிவிக்காமல் கட்சியின் அனுமதியைப் பெறமால் ஓர் அமைப்பை உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம். இது குழப்பத்திற்கே வழிவகுக்கும்.
எனினும், தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது. தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்நாட்டில் மட்டுமன்றி, சர்வதேச ரீதியில் பெரிதும் பாடுபட்டுவருகின்றது. தீர்வுக்கான இந்த இலக்கை நாம் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளோம். சர்வதேச பிரதிநிதிகளுடனான ஒவ்வொரு சந்திப்புகளின்போதும் இதனை நாம் வலியுறுத்திக் கூறியுள்ளோம். இந்தச் சந்திப்புகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர், மாகாண சபைகளின் அமைச்சர்கள் மற்றும் மாகாண சபைகளின் உறுப்பினர்களும் பங்கேற்றிருக்கின்றார்கள். நாம் ஓரணியில் நின்று நிரந்தர அரசியல் தீர்வைக் காண விரும்புகின்றோம். இதைக் குழப்பியடிக்க விரும்பவில்லை. குழப்பியடிக்க விரும்புவோர் இதனைக் கவனத்திற்கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் பேரவை அமைப்பின் உருவாக்கத்திற்கு இப்போது என்னால் பதிலளிக்க முடியாது. பொறுத்திருந்துதான் பதில் வழங்குவேன் – என்றார்.
சில உணவுகளைப் பொரித்துச் சமைக்கையிலே பொரிக்கும்சட்டியுள்ளே (வாணலியுள்ளே) தீப்பிடிக்கும். விடயந் தெரியாதவர்கள் ஏதோ அடுப்படியே தீப்பிடித்த மாதிரி அந்தரப்படுவர். ஆனால், சமைப்பவர் மிக மகிழ்வோடு நன்கு கிளறிச் சமையலைத் தொடர்வார். அவருக்குத் தெரியும் இது இவ்வளவுந்தான். தண்ணீர் தெளித்துக் கிளற, மணமுஞ் சுவையும் கூடும். திறந்தவெளிச் சாப்பாட்டுக் கடைகளிலே இவ்வாறு சமைப்பது ஒரு கலை. இது ஒருவகைச் சாலவித்தை – நடிப்பு. “கிமிக்” – gimmick- என்றும் சொல்லலாம்!
1948 இலிருந்து சிங்கள ஆட்சியாளருக்கு நன்றாகச் சமைக்கத்தெரியும்! ஆனால், எமது மக்கள் தொடர்ந்தும் இந்த வாணவேடிக்கையிலே ஏமாறுவதுதான் மனதிற்கு மிகுந்த வேதனை.
எடுத்த பொறுப்பை – மக்களின் வாக்கு எண்ணிக்கையிலே வயிறை நனைப்பவர்கள் – ஒழுங்காகச் செய்யவேண்டுமென்பதே எமது கோரிக்கை! இயலாதார் தள்ளிநின்றால் இயலுமானவர் சரியாகச் செய்யலாம்!!