புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக மக்கள் கருத்தறியும் அமர்வு கடந்த மாதம் 18ம் திகதி கொழும்பில் ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றது.
வடக்கு மாகாணத்துக்கான அமர்வு இம்மாதம் 5ம் திகதி வவுனியாவில் ஆரம்பமாகியது. தொடர்ந்து கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவில் அமர்வுகள் இடம்பெற்றன.
இதன்போது, தமிழ் மக்கள் தமது கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். தென்பகுதியில் பெரும்பான்மையின மக்கள் பங்கேற்புடன் ஒப்பிடுகையில் இது குறைவானது என்று கருத்தறியும் குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறானதொரு நிலையிலேயே, மக்கள் கருத்தறியும் குழுவின் வடக்கு மாகாணத்துக்கான இருநாள் இறுதி அமர்வுகள் யாழ். மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாயின.
இன்று செவ்வாய்க்கிழமை இறுதி நாள் அமர்வு இடம்பெறவுள்ளது. யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று காலை 9 மணிக்கு இறுதிநாள் அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
தமிழ் மக்களை இதில் பங்கெடுத்து தமது கருத்துகளைத் தெரிவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை, புதிய அரசமைப்பு உருவாக்குவதற்கு வடக்கு மக்களின் கருத்துகள் மிகவும் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க, யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறும் இறுதி அமர்வில் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.