தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து செயற்பட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வருவாராயின் அவரை மகிழ்வுடன் வரவேற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் க.விக்கினேஸ்வரன்.
பேரவையின் 2ம் அமர்வு இன்று காலை 10 மணிக்கு, யாழ்.பொதுநூலக கேட்போர்கூடத்தில் ஆரம்பமானது. இதில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் இணைத்தலைவர்களான வைத்தியகலாநிதி லக்ஸ்மன் மற்றும் த.வசந்தராசா ஆகியோhர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 32 இற்கும் மேற்பட்ட கட்சிகளது தலைவர்கள், பொது அமைப்புக்களது பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இனப்பிரச்சினை தீர்வுக்கான தீர்வுத்திட்டத்தைத் தயாரிக்கும் நிபுணர் குழுவை உருவாக்குதல், ஜ.நா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதை அவதானிப்பதற்கான குழுவை உருவாக்குதல், மற்றும் கலை, கலாச்சார விடயங்களை கையாள்வதற்கான குழுவை உருவாக்கல் போன்றவற்றுக்காக தமிழ் மக்கள் பேரவை இன்று 2ம் அமர்வு நடந்திருந்தது.
குழு நியமனத்தின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் இணைத்தலைவர்களான வைத்தியகலாநிதி லக்ஸ்மன் மற்றும் த.வசந்தராசா ஆகியோர் ஊடகவியலாளர்களது கேள்விகளிற்கு பதிலளித்தனர்.
அப்போதே நேற்றைய தினம் பேரவை தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த முதலமைச்சர் சுமந்திரன் மட்டுமல்ல எவரும் எமது கருத்தினை ஏற்றுக்கொண்டு இணைந்து செயற்பட வருகை தந்தால் அவர்களை வரவேற்று இணைந்து செயற்படத்தயார் என தெரிவித்த முதலமைச்சர் இது அரசியல் கட்சியுமல்ல எதிர்வரும் காலத்தில் அவ்வாறு பரிணமிக்கும் எண்ணமும் இல்லையெனவும் தெரிவித்தார்.
எமது மக்களிற்கு எதிர்கால சந்ததிக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமென அவர் மேலும் தெரிவித்தார்.
இங்கு கட்சிகள் சார்பில் பிரதிநிதிகளே அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,ஈபிஆர்எல்எவ் சார்பில் சுரேஸ்பிறேமச்சந்திரன், புனொட் சார்பில் சித்தார்த்தன், தமிழரசுக்கட்சி சார்பில் பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோர் அழைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.