தம்பி விக்னேஷிற்கு ஈழத்து அண்ணாவின் துயர்மடல்!

214

 

தம்பி விக்னேஷ்.. வேதனையுடன் ஈழத்து அண்ணா எழுதுகின்றேன்…

தம்பி விக்னேஷ்.. நீ போய்விட்டாய் உன் முடிவை சொல்ல வேறு வழிகள் இருந்தது. அவ்வாறு இருக்க நீ இறந்து போனது முட்டாள்தனம்.

நீ என் தம்பி என்பதற்காக உன் முடிவை ஆமோதிக்க முடியாது. நீ நெருப்பு. நீ இருந்திருக்க வேண்டியவன் இறந்திருக்க வேண்டியவன் அல்ல.

நீ கட்சியின் தொண்டன் அல்ல நீ தமிழர்களின் தொண்டன் நீ இருந்திருக்கவேண்டியவன்.

நீ உண்மையானவன் நீ இறந்திருக்க வேண்டியவன் அல்ல பால்வடியும் உன் முகத்திற்கு நான் தலைசாய்க்கின்றேன் வணங்குகின்றேன் நீ போயிருக்கக்கூடாது.

உனக்கென இன்னும் கடமைகள் இருந்தது நீ பொறுமை காத்திருக்கவேண்டும். நான் காவிரிக்காக இரங்கவில்லை. அது சித்து விளையாட்டு. உனக்காக கலங்குகின்றேன்.

அடுத்த சூப்பர் ஸ்டார் யாரென்று வாக்கெடுப்பு நடத்துகின்ற இளைஞர்கள் மத்தியில் உன்னுயிர் எத்தனை மாகா பெரிது தெரியுமா?

சானல்களுக்கும் அங்கு தெரிகின்ற சதைகளின் இடைவெளிகளுக்குள்ளும் சதா தொலைகின்ற இன்றைய இளைய தலைமுறைகள் மத்தியில் நீ மாபெரும் கோபுரம் என்பதை ஏன் அறிந்திருக்கவில்லை.

நீ உன் இறுதி வார்த்தைகளை கடித வடிவில் எழுதிக்கொண்டிருந்த அந்தக் கணத்திலும் நீ தீயில் கருகிக் கொண்டிருந்த அந்தக்கணத்திலும் நீ உயிருக்காக போராடிக்கொண்டிருந்த அந்தக்கணத்திலும் உன் கடைசி மூச்சு காற்றில் கலந்த அந்தக்கணத்திலும் சில கூட்டம் தொலைக்காட்சித் தொடர்களையும் நட்சத்திர களியாட்டங்களையும் பார்த்துக்கொண்டிருந்தது.

இன்று இல்லை எனில் நாளை நாம் வெல்வோம் அதற்காய் நீ வேண்டும் உனது பெருமைமிக்க உயிரை நாம் தொலைத்துவிட்டோம் என்றே எண்ணுகின்றோம்.

அன்னியனை அடக்குவதும் வெல்வதும் வெகுசுலபம் அதற்கு நல்ல தலைமை வேண்டும்.

எத்தனை பேர் தமிழர்களுக்கு தலைமை தாங்குகிறார்கள் நீ எண்ணிப்பார்த்திருந்தால் உன் உயிர் வீணாகவே போகும் என்பதை உணர்ந்திருப்பாய். தம்பி ஏன் நீ கூட உலகத் தமிழர்களின் தன்னிகரற்ற தலைவனாய் இருந்திருக்கலாம் நான் உன்னைப் பிரிந்து விட்டேன்.உன் ஆத்மா சாந்தியடையட்டும்.

SHARE