ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்திற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தாய்லாந்தின் பிரதமருக்குமிடையிலான உத்தியோபூர்வ சந்திப்பு நேற்று மாலை பாங்கொக் நகரில் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.
இலங்கை மற்றும் தாய்லாந்துக்கிடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை அனைத்து துறைகளிலும் வலுவூட்டி புதிய பிரவேசத்திற்குள் கொண்டு செல்லவுள்ளதாக தாய்லாந்து பிரதமர் பிரயுட் ஷான்-ஓ-ஷா (Prayut Chan-o-Cha ) கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தாய்லாந்து பிரதமர் மற்றும் அவருடைய பாரியார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன ஆகியோரை மிகவும் உற்சாகமாக வரவேற்றதாக தெரியவந்துள்ளது.
தலைவர்கள் இருவருக்கிடையிலும் நட்பு ரீதியான கலந்துரையாடலின் பின்னர் இருதரப்பு கலந்துரையால் ஆரம்பமானதென தெரியவந்துள்ளது.
இலங்கைக்கு என்றும் தாய்லாந்து அரசு வழங்கும் ஒத்துழைப்புகளை பாராட்டிய ஜனாதிபதி, குறிப்பாக அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரி அனர்த்தங்களின் போது இலங்கை மக்களுக்கு வழங்கிய உதவிகள் தொடர்பில் தன்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்குமிடையிலான விவசாயத்துறையின் தொடர்புகளை மேலும் முன்னேற்றுவது தொடர்பில் இரு தலைவர்களும் இதன்போது விரிவாக கலந்துரையாடியதாக தெரியவந்துள்ளது.
பௌத்த நாடுகள் என்றவகையில் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் அனைத்து துறைகளையும் வலுவூட்ட முடியும் என்பதை சுட்டிக்காட்டிய தாய்லாந்துப் பிரதமர், இரு நாடுகளுக்குமிடையில் சுற்றுலாத்துறையினை முன்னேற்றும் வகையில், எதிர்காலத்தில் பல வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இலஞ்ச ஊழல் மற்றும் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக இலங்கை அரசு முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளைப்பற்றி தெளிபடுத்திய ஜனாதிபதி, தேசிய நல்லிணக்க வேலைத்திட்டத்தினை வலுவூட்டுவதற்கு தமது அரசு முன்னுரிமை அளித்திருப்பதாக குறிப்பிட்டார்.
புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதன் மூலமும், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்தி, சுதந்திரமான ஜனநாயக நாடொன்றை கட்டியெழுப்புவதையே எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இரண்டாவது தடவையாகவும் தாய்லாந்திற்கு விஜயத்தினை மேற்கொண்ட ஜனாதிபதியிற்கு தமது நன்றியினைத் தாய்லாந்து பிரதமர் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையின்கீழ் இலங்கை சிறந்ததோர் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் எனவும், அப்பயணத்தின்போது தாய்லாந்து நாட்டினால் வழங்கக்கூடிய அனைத்து ஒத்துழைப்பினையும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.