திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்ற திருக்குறள் போட்டி

206

திருகோணமலை மாவட்ட பாடசாலை மாணவரது தமிழ் மொழி ஆற்றலையும் தமிழ்ப் பண்பாட்டு அறிவையும் மனனத் திறனையும் உயர் எண்ண வளத்தையும் மேம்படுத்தும் நோக்கோடு திருக்குறள் போட்டி நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட மட்டத்திலான இறுதிப் போட்டி நேற்று முன்தினம் திருகோணமலை நகரில் உள்ள ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றுள்ளது. முற்பகலில் எழுத்துத் தேர்வும் பிற்பகலில் ஓதுதல் தேர்வும் இடம்பெற்றுள்ளன.

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களமும் திருகோணமலை மாவட்ட நலன்புரிச்சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறட் போட்டியானது கடந்த 2018.10.06 அன்று பாடசாலை மட்டத்திலும் 2018.10.20 ஆம் திகதி வலய மட்டத்திலும் நடத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள திருகோணமலை வடக்கு, திருகோணமலை, கிண்ணியா, மூதூர், கந்தளாய் ஆகிய ஐந்து வலயங்கலிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர் மேற்படி திருக்குறள் போட்டியில் பங்குபற்றியுள்ளனர்.

கீழ்ப்பிரிவு, நடுப்பிரிவு, மேற்பிரிவு மற்றும் உயர்பிரிவு என நான்கு பிரிவுகளாக இப்போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலாம் இடத்தைப் பெறும் மாணவருக்கு 25,000 ரூபா பெறுமதியான பணப் பரிசில் வழங்கப்படவுள்ளது.

இரண்டாம் இடத்தினைப் பெறும் மாணவருக்கு 15,000 ரூபா பணப்பரிசிலும் மூன்றாம் இடத்தினைப் பெறும் மாணவருக்கு 10,000 ரூபா பெறுமதியான பணப்பரிசிலும் வழங்கப்படவுள்ளதுடன் மாகாண கல்வித் திணைக்களத்தால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

குறித்த பணப்பரிசிலும் கல்வித் திணைக்களத்தின் சான்றிதழும் இதற்காக ஒழுங்கு செய்யப்படும் பரிசளிப்பு விழாவில் வைத்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE