திருமணத்திற்கு சென்ற மணப்பெண்ணிற்கு நேர்ந்த சோகம்: கடவுளாக வந்து உதவிய பொலிசார்

333
சுவிட்சர்லாந்து நாட்டில் காதலர் தினத்தன்று திருமணம் செய்துக்கொள்ள ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தபோதிலும், மணப்பெண்ணிற்கு ஏற்பட்ட கடைசி நிமிட சோகம் திருமணத்தை நிறுத்துமளவிற்கு சென்றுள்ளது.சுவிஸின் பேர்ன் மாகாணத்தை சேர்ந்த Fatima(26) என்ற பெண்ணும் Rodrigue (36) என்பவரும் காதலித்து வந்ததை தொடர்ந்து, இருவரும் காதலர் தினமான நேற்று முன் தினம் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகள் Cernier என்ற நகரில் உள்ள திருமண பதிவு அலுவலகத்தில் மும்முரமாக நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 13ம் திகதி இரவு மணப்பெண்ணான Fatima தன்னுடைய உறவினர் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கியுள்ளார்.

ஏனெனில், அவரது உறவினர் மேக்-அப் செய்வதில் திறமையானவர் என்பதால், மறுநாள் அதிகாலையில் அவர் மூலம் மேக்-அப் செய்துக்கொண்டு திருமண பதிவு அலுவலகத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

திட்டப்படி எல்லாம் நடைபெற்று முடிந்த நிலையில், அதிகாலையில் மேக்-அப் செய்துக்கொண்ட மணப்பெண் அந்த உறவினருடன் காரில் திருமண பதிவு அலுவலகம் நோக்கி புறப்பட்டுள்ளார்.

ஆனால், துரதிஷ்டவசமாக அதிகாலை நேரம் என்பதால் சாலை முழுவதும் பனி வீசி பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நீண்ட தூரம் வாகனங்கள் நின்று கொண்டு இருப்பதை பார்த்த மணப்பெண்ணிற்கு ‘இன்று தனது திருமணம் நடக்குமா? நடக்காதா?’ என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

உடனடியாக தனது எதிர்கால கணவனை கைப்பேசியில் தொடர்புக்கொண்டு நிலைமையை எடுத்துக்கூறியுள்ளார்.

இதனை அறிந்த மணமகன், திருமண பதிவு அலுவலக அதிகாரியை தொடர்புக்கொண்டு திருமணத்தை ஒரு மணி நேரம் தள்ளிப்போட கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் சீரானதும் மணப்பெண் காரை வேகமாக செலுத்தியுள்ளார். ஆனால், துரதிஷ்டவசமாக பாதி தூரத்தில் கார் பழுதாகி நின்றுள்ளது.

அடுத்தடுத்து நிகழும் அதிர்ச்சி சம்பவங்களால் மணப்பெண் கவலையில் இருந்தபோது அங்கு இரண்டு பொலிசார் வந்துள்ளனர்.

பொலிசாரிடம் மணப்பெண்ணின் சூழ்நிலை பற்றி விவரிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் அந்த பகுதியில் பொலிசார் அவசியம் இருக்க வேண்டிய சூழல்.

ஆனால், தன்னுடைய சக பொலிசாரிடம் ‘சிறிது நேரம் போக்குவரத்தை கவனித்துக்கொள்ளுங்கள்’ எனக்கூறிய Felicien Building என்ற பெயருடைய அந்த பொலிசார், உடனடியாக மணப்பெண்ணை தனது பொலிஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளார்.

சுமார் 5 கி.மீ தொலைவு சென்றவுடன், அங்கு மணமகன் அனுப்பிய நபர் ஒருவரின் கார் வந்தவுடன் அந்த காரில் மணப்பெண்ணை ஏற்றிவிட்டு பணிக்கு திரும்பியுள்ளார்.

சரியான நேரத்திற்குள் சென்ற மணப்பெண்ணின் திருமணமும் கோலாகலமாக நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்த அடுத்த வினாடி கணவனை அழைத்துக்கொண்டு வெளியே வந்த மனைவி நேராக அந்த பொலிசார் பணிபுரிந்த இடத்திற்கு சென்று அவருக்கு உருக்காக நன்றி தெரிவித்து விட்டு திருமண வாழ்த்துகளையும் பெற்று வீடு திரும்பியுள்ளார்.

SHARE