பாரிஸ் நகரில் உணவு விடுதி ஒன்றில் துப்பாக்கியால் தாக்கிவிட்டு தப்பிய நபர்களால் மீண்டும் தீவிரவாத அச்சுறுத்தலா என்ற அச்சம் எழுந்துள்ளது.பாரிஸ் நகரின் பிரபலமான பாஸ்டில் பகுதியில் அமைந்துள்ள உணவு விடுதி ஒன்றில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள Chez Papa உணவு விடுதியின் முன்பு கூடியிருந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே வாக்குவாதம் கைகலப்பாக மாறியதும், அதில் ஒரு நபர் தாம் வைத்திருந்த துப்பாக்கியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அங்கிருந்த ஒருவருக்கு வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய 3 பேர் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளனர். அதில் ஒரு நபரை கைது செய்துள்ள பிரான்ஸ் பொலிசார், எஞ்சிய இரு நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களின் பெயர் விவரங்கள் எதுவும் தெரியவில்லை என தெரிவித்துள்ள பொலிசார், இந்த துப்பாக்கிச்சூடு தீவிரவாத அச்சுறுத்தல் அல்ல எனவும், விவாதத்தில் ஈடுபட்டவர்கள் ஆத்திரத்தில் நடத்திய தாக்குதல் எனவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் நிஜ காரணம் என்ன என்பது குறித்து விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதலை அடுத்து அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு 4 மாதங்களுக்கு பின்னர் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. |