தென்னிலங்கையில் மஹிந்தவின் யுத்த வெற்றி – மே.18

610

இந்திய இராணுவத்தினர் இலங்கையில் ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வெளியேறிய பின்னர், 1988ம் ஆண்டு அமைதிப்படை இலங்கைக்கு வருகைதந்தமையை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் எதிர்த்திருந்தார். அதனோடு மக்கள் செல்வாக்கினைப் பெற்று ஜனாதிபதியானார். இதன்பின்னர் விடுதலைப்புலிகளுடன் சமரசப்பேச்சுக்களில் ஈடுபட்டுக் கொண்டார்.

அதுமட்டுமல்லாது அமைதிப் படையை திருப்பிப்பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். புலிகளுடன் மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பமாகின. அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறிக்கொண்டது. புலிகள் முக்கியமாக இரண்டு விடயங்களில் தீவிரமாக இருந்தனர். ஒன்று முறையாக தேர்ந்தெடுக்கப்படாத அரசை அகற்றிவிட்டு, புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும் எனவும், இரண்டாவது நாட்டின் எந்தப்பகுதியும் சுயநிர்ணய உரிமை கோரமுடியாது என்ற அரசியலமைப்பின் 6வது சட்டம் மாற்றப்படவேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

அவ்வாறு தேர்தல் நடத்துவதாயின் அனைத்து ஆயுதக்குழுக்களும் ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்று ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் கூறினார். தமிழர்களின் பாதுகாப்புக்கு தாமே பொறுப்பு எனக் கூறி இதற்கு மறுப்பு தெரிவித்தனர் விடுதலைப்புலிகள். 1990இல் அமைதிப்பேச்சுவார்த்தை முறிவடைந்தது. பிரபாகரனுக்கும் பிரேம தாஸவுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது. விடுதலைப்புலிகள் மீண்டும் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். கல்வி, பொருளாதாரம், சட்டம், காவல், கலாச்சாரம், ஊடகம் என்ற துறைகளோடு மீண்டும் ஆட்சிசெய்தனர்.

கொரில்லாப்படையிலிருந்து வளர்ச்சி பெற்று தரை,கடல்,வான் என முழுப்பலத்துடன் உருவெடுத்தனர் தமி ழீழ விடுதலைப்புலிகள். மே21,1991இல் ராஜீவ்காந்தி படுகொலைசெய்யப்பட்டார். 1994ம் ஆண்டு சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழர்கள் மீதான 04 வருட பொருளாதாரத்தடையை சிறிது தளர்த்தியிருந்தார். பிரபா கரன் அதற்காக நன்றிக்கடிதம் எழுத, அதற்கு ஜனாதிபதி சந்திரிக்காவும் பதில் கடிதம் எழுதியிருந்தார்.
அது ஒரு தொடர்கடிதமாக மாறி அமைதிப்பேச்சுவார்த்தையாகவும் உரு வெடுத்தது. பல கட்ட பேச்சுக்கள் இடம்பெற்றன. ஆணையிறவுப் பாதைதிறப்பு, பொருளாதாரத்தடையை விலக்குதல், தமிழர் பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது என்றும்; வலியுறுத்தினர். அதி காரம் இல்லாத அரசால் எந்தவொரு முடிவையும் எடுக்கமுடியவில்லை. அமைதிப்பேச்சுவார்த்தைகளில் முடிவு காணப்படவில்லை. 1998ம் ஆண்டு அரசிற்கும் புலிகளுக்குமிடையிலான யுத்தம் வலுப்பெற்றது. அரசு புலிகளை தடைசெய்தது.

இதனால் புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிப்பகுதிக்குள் நகர்ந்தனர். அடுத்த 48 மணிநேரத்திற்குள் இராணுவத்தினருக்கு பயந்து, யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளுடன் வன்னிப்பகுதிக்கு ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்தனர். மக்கள் குறை வாக காணப்பட்ட யாழ் நகரை இலங்கை இராணுவம் கைப்பற்றியது. குறுகிய நிலப்பகுதிக்குள் அத்தனை மக்களையும் காப்பாற்ற முடியாமல்; மீண்டும் அவர்களை யாழ்ப்பாணம் செல்லுமாறு விடுதலைப்புலிகள் பணித்தனர். மீண்டும் யாழ்ப்பாணம் சென்ற மக்களை இராணுவம் பல துன்புறுத்தல்களைச் செய்தது. மீண்டும் புலிகள் வியூகங்களை வகுத்து ஓயாத அலைகள் – 01 என்ற நடவடிக்கையின் மூலம் இழந்த பகுதி களை மீண்டும் கைப்பற்றினர்.

Victory_Day_srilanka_2014_8

புலிகள் முன்னேறியதால் சந்திரிக்காவின் செல்வாக்கு குறைவடைந்;தது. தோல்வியை மறைக்க அப்பொழுது பத்திரிகைச்சுதந்திரம் தடைசெய்யப்பட்டது. உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவமாக அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தாக்குதலுக்குள்ளானது. அதன்பிறகு உலகெங்கிலுமுள்ள தீவிரவாதிகள் அமைப்புக்களை தடைசெய்யுமாறு குரல்கள் எழுப்பப்பட்டது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய இலங்கையரசு அமெரிக்காவுடன் ஆலோசித்து விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பு என்று தடைசெய்தது.

2001-2004 வரையிலான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் காலப்பகுதியில், புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் செய்ததுடன் 2002இல் அவர்கள் மீதிருந்த தடையினை நீக்கினார். நோர்வே நாட்டின் முயற்சியில் அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 06 கட்ட பேச்சுக்கள் இடம்பெற்றது. அர சின் சார்பாக ஜீ.எல்.பீரிஸூம், விடுதலைப்புலிகள் சார்பாக அன்ரன் பாலசிங்கமும் கலந்துகொண்டனர். நவம்பர் 25, 2002இல் இலங்கையரசும் புலிகளும் ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். வழக்கம்போல ரணில் அரசினால் இந்த ஒப்பந்தத்தை செயற்படுத்த முடியவில்லை. எனி னும் மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ்மக்கள் பங்கெடுக்காதிருக்கவே, மஹிந்த ராஜபக்ஷ குறைந்தளவு வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற்றார். புலிகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

புலிகள் இதனை நிராகரித்தனர். அமைதியான சூழ்நிலையில் இலங்கை இராணுவம் பிற நாடுகளிலிருந்து ஆயுத குவிப்புக்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. ஜனவரி 16,2008இல் இலங்கையரசு அதிகாரபூர்வமாக விடுதலைப்புலிகள் மீது யுத்தத்தை அறிவித்தது. 25 ஆண்டுகாலப்போரில் இருதரப்பும் மாறி மாறி வெற்றி தோல்விகளை சந்தித்தன. ஆனால் ஏப்ரல் 26,2009 இற்குப்பின் இலங்கை இராணுவத்தின் கை ஓங்கியது. தமிழர்களின் காவல் தெய்வங்களாக திகழ்ந்த புலிகள் மூன்றில் ஒரு நிலப்பகுதியையும், இரண்டு பகுதி கடற்கரையையும் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தவர்கள் 15 கிலோ மீற்றர் பரப்பளவிற்குள் உள்ளடக்கப்பட்டு பின்னர் 10 கிலோ மீற்றர், 05 கிலோ மீற்றர் பரப்பளவிற்குள் சிக்குண்டனர்.

கடைசித்தாக்குதலில் சிங்கள இராணுவம் ஒரு இலட்சத்திற்கும் மேலான பொதுமக்களை கொன்றுகுவித்தது. சர்வதேச விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டன. இரண்டாம் உலகப்போரின் வெளிச்சங்களை வெளிப்படுத்திய பத்திரிகைகள் இங்கே தடைசெய்யப்பட்டன. தமிழினப்படுகொலை உலக கவனத்திற்கு வராமல் போனது. மே,2009இல் 25 ஆண்டுகால ஆயுதப்போராட்டத்திற்குப் பின்னர் தமிழர்களின் குரல் தற்காலிகமாக மௌனிக்கப்பட்டது.

இலங்கை சிங்களவர் வெற்றிவிழாக்கள் கொண்டாடினர். எங்கும் பெரும்பான்மை இனத்தவர்களின் கொண்டாட்டம். இலங்கைத்தமிழரும், உலகத் தமிழரும் அமைதியாக அழுதனர். கணக்கில்லாத தமிழர்களின் தியாகங்களும், வீரங்களும் விரயமாயின. இலங்கைத் தமிழரின் போராட்டம் இன்றும் தொடர்கிறது. யுத்தம் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்திக் காட்டுவேன் என்று கூறி னார். தமிழர் தரப்பினர் உட்பட அனை வரிடமும் கலந்துரையாடி நிரந்தரமான வளர்ச்சியையும் இலங்கைக்கு கொண்டுவருவேன் என்றார்.

ஆனால் புலிகள் இல்லாத இலங்கையில் இன்று சிங்கள அரசு குடியேற்றும் சிங்களக் குடும்பங்களும், தமிழர் அடையாள அழிப்புக்களும், சிங்களப் பெயர் மாற்றங்களும் தொடர்ந்து இடம்பெறுகின்றன. தமிழர்களின் மறுவாழ்வு சீரமைப்பு மிக மந்தகதியிலும், பரிதாபத்திற்குரியதாகவுமிருக்கின்றது. தமிர்களுக்கான அதிகாரப்பகிர்வு விடயத்தில் பின்தங்கிய நிலையே காணப்படுகின்றது. சிறுபான்மை தமிழர்களை பெரும்பான்மையானவர்களிடமிருந்து விடு விப்பதே சிறந்த தீர்வாகும்.

இலங்கைத்தமிழர்கள் தங்கள் உரிமைக்காக வேற்று மனிதர்களின் உதவியின்றி தாங்களாகவே தங்கள் தகுதியையும் மீறி போராடியிருக்கின்றனர். இன்று அனாதைகளாகவும், இளவயது விதவைகளாகவும், ஊனமுற்ற ஒரு சமுதாயமாகவே சமாதான எதிர்காலத்தை சந்திக்க உள்ளனர். உலக நாடுகள் இலங்கைத் தமிழர்கள் தலைநிமிர்ந்து சுயமரியாதையோடும், அமைதியோடும், வாழ உதவுவார்களா?
இலங்கை அரசாங்கம், விடுதலைப்புலிகள் மீதான தமது வெற்றியின் 5வது ஆண்டு நிறைவை

அனுஷ்டித்தது. அதனை முன்னிட்டு பெரும் இராணுவ அணிவகுப்பு அங்கு நடந்தது. ஆனால், பல மேற்கு நாடுக ளின் தூதுவர்கள் அந்த அணிவகுப்பில் கலந்துகொள்ளவில்லை. அரசாங்கம் நல்லிணக்கத்தை நோக்கி செயற்பட வேண்டும் என்பதால், இவை பொருத்தமற்றவை என்று கனடா கூறியுள்ளது.

தோல்வியடைந்த தரப்பில் இறந்தவர்களுக்காக, தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகள் மற்றும் மத வைபவங்களுக்கும் அரசாங்கம் தடைவிதித்திருந்தது. தமிழர்கள் அதிகமாக வாழும் வட பகுதி யில் சில குறிப்பிட்ட இடங்களில் இலங்கை இராணுவம், மக்கள் நடமாட்டத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்த தினத்தை குறிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் ஒன்று கூட நடக்க முடியாமல் போனது.விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அந்த அமைப்புக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க முயலுவதாலேயே இந்த நடவடிக்கைகள் என்று அதிகாரிகள் கூறியிருக்கின்றார்கள். இதேவேளை பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமே தவிர தமிழர்களுக்கு எதிரானதல்ல என்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு ஊடாகவே தீர்வு காண முடியும் என மீண்டும் வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்.

இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்த ஐந்து ஆண்டு நிறைவையொட்டி மாத்தறையில் நடைபெற்ற தேசிய ரீதியிலான யுத்த வெற்றி நாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தேசியப் பிரச்சினைகளை பேச்சுவார்தை மூலம் தீர்ப்பதற்குரிய இடம்தான் பாராளுமன்ற தெரிவுக்குழு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் சிங்களத்திலும், தமிழிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். குறிப்பாக தமிழில் உரையாற்றிய அவர், நடைபெற்று முடிந்த யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரா னதே தவிர, தமிழ் சகோதரர்களுக்கு எதிரானது அல்ல என்றும் 30 வருட பயங்கரவாதத்தினால் நாட்டில் சகல இன மக்களும் வேதனைகளை அனுபவித்தார்கள், குறிப்பாக தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்கள். துன்பங்கள் சொல்ல முடியாதவை என்றும் கூறியிருக்கின்றார்.

இந்தப் பயங்கரவாதத்திற்கு முடிவு காணப்படாமல் இருந்திருந்தால் இன்னும் பல உயிரிழப்புகளும், அழிவுகளும் ஏற்பட்டிருக்கும். வெளிநாடுகளில் தீவிரப் போக்குடைய சிலர் நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க முற்படுகின்றார்கள். இந்நாட்டில் வாழும் மூவினங்களின் பாதுகாவலன் என்ற ரீதி யில் இதற்கு இடமளிக்க மாட்டேன். தற்போது இலங்கை இராணுவத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் இருக்கின்றார்கள் என்று மஹிந்த ராஜபக்ஷ தனது தமிழ் மொழியிலான உரையில் குறிப்பிட்டார்.

இவ்வாறு குறிப்பிட்டிருப்பது தமிழ்மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு போர் அத்தியாயத்திற்குள் இட்டுச்செல்லும் என்பதே பல ஆய்வாளர்களின் கருத்தாகும்.

–  நெற்றிப்பொறியன் –

 

SHARE