கொழும்பு வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண பனை, தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் பங்குப்பற்றிய பிரதிநிதிகள் தாம் வியாபாரத்தின் போது முகம்கொடுக்கும் பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இதேவேளை தென்னை மற்றும் பனம்பொருள் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களுக்கான வரி அதிகரித்துள்ளதால் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் இதனால் வரிக்குறைப்பு போன்ற சாத்தியமான நிவாரணங்களை தமக்கு வழங்குமாறும் கேட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த பிரச்சினைகளை எழுத்து மூலமாக விரிவாக அறியத்தரும்படி கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி பிரச்சினைகளுக்கான தீர்வை பெற முயற்சிகளை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர் மனோ கணேசன், கொழும்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் அல் ஹாஜ் வை.எம்.இப்ராஹிம், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், வடமாகாண பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் தலைவர் நாகன் கணேசன் மற்றும் சங்க உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.
வடமாகாண பனை, தென்னை வள அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் சார்பாக எதிர்வரும் ஜூலை மாதம் கொண்டாடப்படவிருக்கும் சர்வதேச கூட்டுறவாளர் தின விழாவில் ஜனாதிபதியை பங்குபெறுமாறு இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு வர்த்தக சங்கத்தினரால் நினைவுச்சின்னம் ஒன்று ஜனாதிபதிக்கு வழங்கிவைக்கப்பட்டது.