இந்த கடத்தலுக்கு அவரின் டிபெண்டர் ரக ஜீப் வண்டியே பயன்படுத்தப்பட்டுள்ளதோடு கடத்தப்பட்ட நபர் முதலில் ஹிருணிகா பிரேமச்சந்திரவிடமே அழைத்துச் செல்லப்பபட்டுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான விசாரணை கோப்புகள் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கைதான 8 சந்தேக நபர்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. கடந்த டிசம்பர் 21ம் திகதி தெமட்டகொட பகுதியில் வைத்து கடையொன்றிலிருந்த நபர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
கைது செய்யப்பட்டுள்ள 8 சந்தேக நபர்களும் அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் அடையாள அணிவகுப்பிற்காக 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிபெண்டர் ரக ஜீப் ஹிருனிகா பிரேமச்சந்திரவுக்குரியது என விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. இதன் படி இந்த கடத்தலுக்கு காரணமாக அமைந்த குடும்ப தகராறு குறித்து குறித்த பெண்ணின் கணவனிடம் மேலதிக விசாரணை நடத்தி பெற்ற தகவல்களையும் கடத்தல் சம்பவத்தின் போது 5வது சந்தேக நபருடன் சம்பவ இடத்திற்கு வந்த 11 வயதான மகளிடம் பெற்ற மேலதிக தகவல்களையும் நேற்று (1) சட்டமா அதிபருக்கு வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். ஹிருனிகா பிரேமச்சந்திரவின் ஊடகவியலாளர் மாநாட்டு வீடியோக்களை பெறவும் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.