‘தேசிய தமிழ் மொழி தினம் கண்டியில்’

260

தேசிய தமிழ் மொழி தின விழா கண்டி மாநகரில் கொண்டாடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் காணப்படும் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கிடையில் தமிழ் மொழி சம்பந்தமான  போட்டிகள் வலய மாகாண மற்றும் தேசிய ரீதியில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் தேசிய தமிழ் மொழித்தின கண்டி மாநகரில் வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இதன்படி  தேசிய தமிழ் மொழித்தின விழா ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் கொண்டாடுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஏற்பாடுகள் குறித்து கண்டி தமிழ் வர்த்தக சங்கத்தினருக்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனுக்கும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று கண்டியில் நடைபெற்றது. இதன்போது கண்டி வர்த்தக பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடலின் படி ஒக்டோபர் மாதம் நடைபெறும் தேசிய தமிழ் மொழி தினத்தில் காலையில் மாபெரும் கலாசார ஊர்வலம் ஒன்று கண்டி நகரில் நடைபெற உள்ளது. இதில் சகல மாகாணங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களின்  கலாசார நிகழ்வுகள் நடைபெறுவதுடன் அந்தந்த பிரதேசங்ளுக்குறிய பண்பாட்டு நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் கலை நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. தொடர்ந்து உலகளாவிய கலைஞர்களினதும் புத்திஜீவிகளினதும் சொற்பொழிவுகளும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இந்நிகழ்வுகளில் இந்தியா உட்பட உலக நாடுகளின் அரசியல்வாதிகள், கலைஞர்கள், புத்திஜீவிகளும் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு தமிழறிஞர்கள், வட மாகாண முதலமைச்சர், பிரதமர், ஜனாதிபதி அமைச்சர்கள் உட்பட பாராமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இலங்கை வரலாற்றில் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்டு வரும் தேசிய தமிழ் மொழித்தின நிகழ்வில் இதுவே முதற் தடவையாக  தேசிய ரீதியில்  கொண்டாடப்படும் முதல் தேசிய தமிழ் மொழித் தின விழாவாகும்.  கல்வி அமைச்சில் தற்போது கல்வி இராஜாங்க அமைச்சு பதவியை வே.இராதாகிருஸ்ணன் அவர்களுக்கு வழங்கிய நிமித்தமே இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மொழித்தினம் உலகளாவிய ரீதியில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடைபெற்று வரும் வேலையில் இலங்கையில் தேசிய தமிழ் மொழித்தின விழா பாடசாலை மட்டத்தில் கொண்டாடப்படுவது வரவேற்கத்தக்க விடயமொன்றாகும்.

SHARE