சிட்டகாங்கில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணியின் தோல்வியை தாங்க முடியாமல் ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.
இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் வங்கதேசமும் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியின் போது வங்கதேச வீரர்களுக்கும், இங்கிலாந்து வீரர்களுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக மூன்றாவது போட்டியில் இரு அணி வீரர்களும் சற்று ஆக்ரோசத்துடனே விளையாடினர்.
இப்போட்டியில் முதலில் துடுப்பேடுத்தாடிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால், இம்ரால் கேய்ஸ் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். தமிம் இக்பால்(45), கேய்ஸ்(46) ஒட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதற்கு அடுத்த படியாக வந்த சபீர்ரஹ்மான், முஸ்தபீர் ரகீம்மின் சிறப்பான ஆட்டத்தால் வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்கள் எடுத்தது.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக ரகீம் 67 ஓட்டங்களும், ரஹ்மான் 49 ஓட்டங்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அடில் ராசித் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கடின இலக்கை துரத்துவதற்காக இங்கிலாந்து அணி தரப்பில் துவக்க ஆட்டக்காரர்களாக வின்சும், பில்லிங்ஸ்சும் களமிறங்கினர்.
துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான துவக்கத்தை கொடுத்ததால் இங்கிலாந்து அணியின் ஓட்டங்கள் மளமளவென உயர்ந்தது.
இதில் வின்ஸ்(32) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்த வந்த வீரர்கள் பில்லிங்ஸ்(62), டகட்ஸ்(63), ஸ்டொக்ஸ்(47) இவர்களின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் வங்கதேச அணியின் தலைவர் மோர்தசா இங்கிலாந்து வீரர் பில்லிங்ஸ்சிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வங்கதேச வீரர்களுக்கு மட்டுமில்லாமல் போட்டியை காணவந்த ரசிகர்களும் வங்கதேச அணியின் தோல்வியை தாங்கமுடியாமல் கண்ணீர் விட்டு அழுத சம்பவமும் நடந்துள்ளது.
மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி வென்றதால், இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் மைதானத்தில் ஆட்டம், பாட்டம் போட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.