நடைபெறவிருக்கின்ற உள்ளுராட்சி தேர்தலில் பெண்களுக்கு முன்னுரிமை – அமைச்சர் திகாம்பரம்

338

 

நடைபெறவிருக்கின்ற உள்ளுராட்சி தேர்தலில் பெண்களுக்கு 20 வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே பெண்களாகிய நீங்கள் தேர்தலில் போட்டியிட முன்வர வேண்டும் என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

cb4360e8-11b7-4f41-b54b-a82e1de27320

தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட டயகம மேற்கு 2ம் பிரிவு தோட்ட பகுதியில்  22 குடும்பங்களுக்கான பசும் பொன் வீடமைப்பு திட்டம் நிர்மாணிக்கப்பட்டு 14.02.2016 அன்று கையளிக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்…

ஆயிரம் ரூபா பெற்றுத்தருவோம் என கூறியவர்கள் இன்று ஒழிந்துவிட்டார்கள். நாங்கள் சம்பள உயர்வை பெற்றுத்தருவோம் என மக்கள் மத்தியில் கூறிய போது மலையக தலைவர்கள் என்று மார்பை தட்டிக்கொண்டவர்களால் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியாமல் போய்விட்டது.

ஆனால் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி சம்பள உயர்வை பெற்றுத் தருவதாக கூறினோம். அடுத்த மாதம் முதல் கொடுப்பனவு 2500 ரூபா வழங்கப்படும். தற்போது மலையக மக்களுடைய பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசுவதற்தான வாய்ப்புகள் கிட்டியுள்ளது. கடந்த காலங்களில் எங்களுடைய மக்களை பிரதிநிதித்துவம் படுத்தியவர்கள் பாராளுமன்றத்தில் மக்களுடைய பிரச்சினைகளை பேசாமல் மௌனமாக இருந்ததை அணைவரும் உணர்ந்திருப்பீர்கள்.

200 வருடங்கள் இம்மண்ணில் வாழ்ந்த நாங்கள் எங்களுக்கென 7 பேர்ச் காணியை கூட பேசி பெற்றுத்தர முடியாத தலைவர்கள் எமது மக்களை அடிமைகளாக இருந்து உயிரிழக்கவே வழி செய்தார்கள்.

மனோ கணேசன், இராதாகிருஷ்ணன், நான் உட்பட அணைவரும் ஒற்றுமையாக இருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற ரீதியில்  செயல்பட்டு வருகின்றோம்.

எங்களை போன்று எமது மக்களும் கட்சி பேதமின்றி ஒற்றுமையாக செயல்பட்டால் 5 வருடத்தில் மலையகத்தில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டயமைக்க முடியும்.

எங்களுடைய பிரச்சினைகளை எங்களால் மாத்திரமே பேச முடியும். இந்தியாவிலிருந்து வந்து அரசியல் செய்பவர்களுக்கு எங்களை பற்றி பேச எதுவும் இல்லை.

கடந்த அரசாங்கத்தின் போது டயகம பிரதேசத்தில் மாடி வீடுகளை அமைப்பதற்காக அடிக்கலை நாட்டினார்கள். அப்போது நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதியிடம் இப்பகுதியில் தனி வீடுகளை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம்.

எமது மக்கள் அரசியலில் மாற்றம் வர வேண்டும் என நினைத்து எங்களுக்கு வாக்களித்தார்கள். 8ம் திகதி ஆட்சியை மாற்றியது மாத்திரமல்லாது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.

எங்களுடைய கோரிக்கைகளை ஏற்ற ஜனாதிபதி அவர்கள் மலையகத்தில் தனி வீடுகளை அமைப்பதற்கு அனுமதியை வழங்கினார்கள். இன்று நாங்கள் அதனை கட்டி முடித்து வருகின்றோம்.

எங்களுடைய செயல்பாடுகளை பொருத்துக்கொள்ள முடியாத சில அரசியல் தலைவர்கள் மக்களை தூண்டிவிட்டு வீடுகள் அமைப்பது பொய். சம்பள உயர்வு பெற்றுத்தருவது பொய் என மக்கள் மத்தியில் அரசியல் நாடகம் ஆடுவதற்கு முயற்சிக்கின்றனர்.

மக்கள் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல. இன்று மக்கள் அணைவரும் கட்சி பேதமின்றி ஒற்றுமையாக செயல்பட்டால் எங்களுடைய அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியும் என்றார்.

 

SHARE