நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலர்  550 இன்று விடுதலை!

287

 

நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலர் இன்று பொதுமன்னிப்பின் பிரகாரம் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய 70 வயதிற்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்து வருவோர் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருவோர் உள்ளிட்டோர்களே இவ்வாறு பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

இதேவேளை, இவ்வாறு விடுவிக்கப்படும் கைதிகளுள் தமிழ் அரசியல் கைதிகள் உள்வாங்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பில் விடுதலைசெய்யுமாறு அரசுக்கு ஏற்கனவே அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுவரும் நிலையில், இன்று தமிழ் அரசியல் கைதிகளைத் தவிர்ந்த ஏனைய தரப்பினரை விடுதலைசெய்தால், மேலும் அழுத்தங்களுக்கு உள்ளாக வேண்டியேற்படும் என்பதைக் கருத்தில்கொண்டு தமிழ் அரசியல் கைதிகளுள் ஒரு சிலரை அரசு விடுதலை செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பொதுமன்னிப்பின் அடிப்படையில் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளரை சந்தித்த கிறிஸ்தவ ஒத்துழைப்பு அமைப்பு கோரிக்கை அடங்கிய மகஜரை அவரிடம் கையளித்ததாக கிறிஸ்தவ ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

550 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

நத்தார் தினத்தை முன்னிட்டு 550 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிறைச்சாலை ஆணையாளர் நிஷான் தனசிங்க சிங்கள செய்திச் சேவை ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சிறுகுற்றங்கள் காரணமாக தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கே இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் விசேட கவனம் செலுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், அது தொடர்பான அறிவுறுத்தல் எதுவும் ஜனாதிபதி செயலகத்திலிருந்து தனக்கு இன்று காலை வரை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE