மஹிந்த ஆட்சி காலத்தில் மாத்திரமல்ல தற்போது நல்லாட்சி என சொல்லப்படும் ஆட்சி காலத்திலும் நாம் எமது நிலத்திற்காகவும் கடல் வளத்திற்காகவும் போராட வேண்டிய நிலையிலையே உள்ளோம். என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹர்மன் குமார தெரிவித்துள்ளார்.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்.ரில்கோ விருந்தனர் விடுதியில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
அந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு பகுதி மக்கள் மட்டுமல்ல கிழக்கு மற்றும் தென்னிலங்கை மக்களும் கடந்த ஆட்சி காலத்தில் அநீதிக்கு எதிராக போராடிய போதெல்லாம் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர். அந்த தடைகளை தாண்டியே நாம் கடந்த ஆட்சி காலத்தில் நிலங்கள் கொள்ளை அடிக்கப்பட்டமைக்கும் கடல் வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டமைக்கும் எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்து இருந்தோம்.
கடந்த ஆண்டு ஜூலை 15ம் திகதி எமது அமைப்பினால் யாழிலே ஒழுக்கங்கமைக்கப்பட்ட போராட்டம் எமது சகோதர்களால் காட்டி கொடுக்கப்பட்டு போராட்டம் முடக்கப்பட்டது. எங்களை காட்டி கொடுக்காதீர்கள் எமது போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்.
மஹிந்த ஆட்சி காலத்தில் மாத்திரமல்ல தற்போது நல்லாட்சி என சொல்லப்படும் ஆட்சி காலத்திலும் நாம் எமது நிலத்திற்காகவும் கடல் வளத்திற்காகவும் போராட வேண்டிய நிலையிலையே உள்ளோம்.
சுதந்திரமான சூழலில் இருந்து நாம் போராட வரவில்லை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இருந்தே நாம் போராட்டங்களை முன்னெடுக்கின்றோம்.
கடந்த காலங்களில் நாங்கள் ஒரு போராட்டத்தை ஒழுங்கு செய்தால் எமக்கு பின்னால் பாதுகாப்பு படையினர் அலைந்து திரிவார்கள்.
நேற்றைய தினம் நல்லாட்சி என கூறப்படும் இந்த ஆட்சியில் மீள்குடியேற்ற அமைச்சராக உள்ள டி.எம்.சுவாமிநாதன் கூறி இருக்கின்றார். 4000 மக்களே இன்னும் வலி.வடக்கில் மீள் குடியேற்ற படவேண்டும் என அது மிக பெரிய பொய் என அனைவருக்கும் தெரியும்.
தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் இராணுவ ஊடக பேச்சாளரிடம் ‘ வடக்கில் எதற்காக இராணுவத்தினர் மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளார்கள் ‘ என மக்களின் சிறு துண்டு நிலத்தினை கூட இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்க வில்லை இராணுவம் நிலைகொண்டுள்ள காணிகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் என கூறி இருந்தார்.
தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பொறுப்புள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே ஜெனீவா சென்று பொய் கூறும் போது அந்த இராணுவ ஊடக பேச்சாளர் பொய் கூறியது பெரிய விடயமில்லை தான்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தோற்கடிக்கப்பட்டதும் வடக்கு கிழக்கு மலையக மக்களால் தான் தோற்கடிக்கப்பட்டேன் என கூறினார். அதே வேளை தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரி பால சிறிசேனாவும் வடக்கு கிழக்கு மலையாக மக்கள் தனக்கு வாக்களித்து இருக்காவிடின் தான் தற்போது ஆறு அடி மண்ணுக்குள் புதையுண்டு போயிருப்பேன் என கூறி இருந்தார் .
எனவே ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்ந்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.