நல்லிணக்கம் சாத்தியப்படுவதற்கு சில முன்னோடி நடவடிக்கைகள் அவசியம்!

545

ranil-maithiri-chandirika

நாட்டின் இறைமையானது எல்லா மக்களினதும் கைகளிலேயே உள்ளது. எனவே, அரசியல் யாப்பு என்பது நாட்டின் அதி உயர் சட்டம் என்பதால், எவ்வித பாரபட்சமுமின்றி அனைத்து மக்களினதும் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மற்றும் சுற்றுச் சூழல் சம்பந்தமான நலன்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும்.

முதலாவதாகக் கூறவேண்டியது யாதெனில், ஏற்கனவே இயற்றப்பட்ட அரசியல் யாப்புகளில் உள்வாங்கப்பட்டிருந்த சில விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

உதாரணமாக, முதலாவது சோல்பரி யாப்பில் 29வது சரத்து புறந்தள்ளப்பட்டது. அதாவது, சிறுபான்மை இனங்களுக்கு ஓரளவு பாதுகாப்பினை நல்கக் கூடிய குறித்த சரத்தானது 1956 ல் சிங்களம் மட்டும் சட்ட மூலம் கொண்டு வரப்பட்ட போது அது உதாசீனம் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் 1972ம் ஆண்டு இயற்றப்பட்ட குடியரசு யாப்பில் அது முற்றாக நீக்கப்பட்டது.

இன்று நடைமுறையில் உள்ளதும் 1978ல் இயற்றப்பட்டதுமான நிறைவேற்று ஜனாதிபதி முறைமையிலான யாப்புக்கான 13வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

13வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் மாகாணங்களுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் எந்தவொரு அரசாங்கத்தாலும் நடைமுறைப்படுத்தப்படாதது மட்டுமல்லாமல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பட்டவர்த்தனமாக அதனைக் குப்பைத் தொட்டியில் போட்டார்.

1972 யாப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த ஒற்றையாட்சி முறைமையானது சிங்கள பெரும்பான்மை மேலாதிக்கத்தைப் பிரதிபலிப்பதாகவே சிறுபான்மை இனங்களின் நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது.

மறுபுறத்தில், சமஷ்டி அல்லது இணைப்பாட்சி முறைமை என்பது பிரிவினைவாதம் என்று விஷமத்தனமாகத் தென்னிலங்கையில் பிரசாரம் செய்து, பெரும்பான்மை சிங்கள இனத்தின் சார்பில் கண்மூடித்தனமாக நிராகரிக்கப்பட்டு வந்துள்ளது.

13.09.16ம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆற்றிய உரையில் சமஷ்டி ஆட்சி முறைமை கென்யா, நைஜீரியா, கிழக்கு தீமோர், நேபாளம் போன்ற பல்வேறு நாடுகளில் உள்வாங்கப்பட்டு செயற்பட்டு வருவதை முன்னுதாரணமாகக் கொண்டு எமது நாட்டிலும் அந்த முறைமையைக் கைக்கொள்ளலாம் என்று கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விடயம் யாதெனில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக்காலத்தில ஒற்றையாட்சி அன்றி ஒற்றுமை ஆட்சி என்றொரு கருத்து முன்வைக்கப்பட்டு வந்தது.

அத்தோடு பிராந்தியங்களின் ஒன்றியம் என்று ஒரு சிறந்த முன்மொழிவும் ஜனாதிபதி சந்திரிகாவினால் 1995ல் வெளியிடப்பட்டது.

அவ்வாறான முன்மொழிவை 1994ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட முதற் சுற்றுப் பேச்சுவார்த்தையில் வெளிப்படுத்தியிருந்தால், சற்று சாதகமான நிலைமை உருவாகியிருக்கக் கூடும்.

புதிய அரசியல் யாப்பு

புதிய அரசியல் யாப்பானது நிஜமான ஒற்றுமை, நிலையான சமாதான சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டு வரக்கூடியதாயிருக்க வேண்டும்.

அவ்வாறாகவே இன, மத ரீதியாக பிதற்றித்திரியும் அடிப்படை வாத சக்திகளின் கொட்டத்தை அடக்க முடியும்.

advertisement

இன்று இனவாதம் ஓரளவுக்கு பின்வாங்கியுள்ளதாயினும், அதற்கு உசுப்பேற்றுவதற்கு பிற்போக்குவாத சக்திகள் கங்கணம் கட்டி நிற்கின்றன.

அது உறுதியாகவும் முழுமையாகவும் முறியடிக்கப்பட வேண்டும்.கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும்நல்லிணக்க ஆணைக்குழு (LLRC)கடந்த காலத்திலான எல்லா அரசாங்கங்கங்களும் தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான தொரு அரசியல் தீர்வு காணத்தவறியதாலேயே நீண்ட காலமாக இடம் பெற்று வந்த வன்முறைகளுக்கும் பலத்த அழிவைக் கொண்டு வந்த யுத்தத்திற்கும் வழிசமைக்கப்பட்டது.

எனவே நிலையானதொரு தீர்வு துரித கதியில் காணப்பட வேண்டும் என்று ஆணைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.

துரதிஷ்டவசமாக இவ் ஆணைக்குழுவானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தின் முதற்கட்டத்திலேயே நியமிக்கப்பட்டிருந்ததாயினும், அதன் அறிக்கை ஏறத்தாழ கிடப்பில் போடப்பட்டிருந்தது.

ஆணைக்குழு தமது இடைக்கால அறிக்கை கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ராஜபக் ஷ அரசாங்கத்தைச் சாடியிருந்ததாயினும், அதுவுமே பொருட்படுத்தப்படவில்லை.

எனவே தான் இன்றைய அரசியல் யாப்பு சபையானது மேற்படி ஆணைக்குழுவின் பரிந்துரைகளைக் கட்டாயமாகக் கவனத்தில் எடுக்க வேண்டும்.

தவறவிட்ட சந்தர்ப்பங்கள்.1958ல் பேரினவாத மற்றும் அதி தீவிர வாத சக்திகள் பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தத்தைத் தூக்கியெறிவதற்கு கங்கணம் கட்டி நின்றதாலே அதற்கு அடிபணிந்து ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டதாலேயே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணக்கூடிய சந்தர்ப்பம் நழுவிப் போனது.

மேலும், குறிப்பாக 1985 இல் திம்பு பேச்சுவார்த்தைகள், பின்பு மங்கள முனசிங்க தலைமையிலான குழு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் போன்ற பல பிரயத்தனங்கள் பலனளிக்காமல் போனதன் ஒட்டுமொத்த விளைவாகவே 26 வருட கால கோர யுத்தம் நடைபெற்றது,

நவசமசமாஜக் கட்சி 1970கள் முதல் இன்று வரை இனப்பிரச்சினைக்கான தீர்விற்காக விடாப்பிடியாக குரல் கொடுத்து போராடி வந்துள்ளது.

அதாவது, வடக்கு, -கிழக்கு பிராந்தியத்துக்கு சமத்துவமும் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சுயாட்சி வழங்கப்படுவது தான் முழு நாட்டுக்குமே நிலையான சமாதானத்தையும் அமைதியையும் தரவல்லது என்பதை புறக்கணித்து பேரினவாதத்திற்கு அடிபணிந்து நாட்டை ஆண்ட தலைமைகளின் குருட்டுத்தனம் காரணமாகவே யுத்தமும் அழிவும் தாண்டவம் ஆடின.

காற்றுள்ள போது தான் தூற்றிக் கொள்ளலாம்புரையோடிப் போயுள்ள தேசிய இனப்பிரச்சினைககு உறுதியான தீர்வு காண்பதற்கு இன்றைய சூழ்நிலையைத் தவிர வேறு நல்ல சந்தர்பபம் கிடைப்பது அரிது.

இச்சந்தர்ப்பத்தில் இன்னொரு முக்கியமான விடயத்தையும் இதய சுத்தியாகக் குறிப்பிட்டாக வேண்டும்.அதாவது, நல்லிணக்கம் என்பது எது வித முன்னோடி நடவடிக்கைகளும் இன்றி சாத்தியப்படக்கூடிய காரியமல்ல.

ஏனென்றால் யுத்தம் முற்றுப் பெற்று 7 வருடங்களுக்கு கூடிய காலம் கழிந்து விட்ட நிலையிலும், குறிப்பாக வடக்கில் அதிகளவு இராணுவ பிரசன்னம் காணப்படுகின்றது.

அத்தோடு, ஆயுதப்படையினர் தமக்கு மேலும் முகாம்கள் தேவைப்படுவதாகக் கூறி கூடுதலான காணிகளைக் கையகப்படுத்தும் நிலைமை தொடர்கிறது.

அவர்கள் அங்கே விவசாயம், பாற்பண்ணைகள் மற்றும் உணவகங்கள் நடத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதால், உள்ளூர் மக்களின் வாழ் வாதாரங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.

அதேநேரம் ஆயிரக்கணக்கான இடம் பெயர்ந்த மக்கள் இன்னும் அகதிக் கூடா ரங்களில் அவல வாழ்க்கை நடத்திக் கொண் டிருக்கின்றனர்.

இத்தகையதொரு பின்னணியில் நல்லிணக்கம் என்பது எட்டாக் கனியாகவே இருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது,

SHARE