நல்லூர் ஆலய உற்சவத்தை முன்னிட்டு வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் சில நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகளவான கட்டணத்தை வசூலிப்பதாக பக்தர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி வெகு விமர்சையாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் ஆலய உற்சவ காலத்தை முன்னிட்டு யாழ். மாநகர சபையின் அனுமதியைப் பெற்று வாகனத் தரிப்பு நிலையங்கள் ஆலயத்தை அண்மித்துள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள வாகன பாதுகாப்பு நிலையங்களில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஐந்து ரூபாவும், மோட்டார் சைக்கிள்களுக்கு 10 ரூபாவும் கட்டணமாக அறவிடப்பட வேண்டுமென யாழ். மாநகர சபை அறிவுறுத்தியிருந்தது.
எனினும், சில வாகன பாதுகாப்பு நிலையங்கள் சைக்கிளுக்கு பத்து ரூபாவும், மோட்டார் சைக்கிளுக்கு 20 ரூபாவும் வசூலிக்கப்பட்டிருந்ததாக பக்தர்களால் யாழ். மாநகர சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து உடனடிச் சோதனையில் ஈடுபட்ட யாழ். மாநகர சபை அதிகாரிகள் அதிக கட்டணம் வசூல் செய்தவர்களுக்கு கடுமையான முறையில் எச்சரிக்கை விடுத்தனர்.
எனினும், மீண்டும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலும் அதிக தொகைக் கட்டணத்தை சில வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் அறவிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இரு வேறு அளவிலான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கண்டும் காணாமலும் இருப்பது பக்தர்கள் மக்கள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மாநகர சபையின் அதிகாரிகள் இந்த விடயத்தில் மென்போக்குடன் செயற்படுவது அவர்கள் குறித்த வாகனப் பாதுகாப்பு நிலைய உரிமையாளர்களிடம் இலஞ்சம் பெற்றுள்ளார்களோ என்ற சந்தேகத்தையும் தோற்றுவததுள்ளது.